முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் பேரணியில் வன்முறை : நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். 

முன்கூட்டியே பேரணியைத் தொடங்கியதாலும், அனுமதித்ததற்கு மாறான பாதையில் டிராக்டர்கள் சென்றதாலும் காவல்துறையினர் தடுத்ததாகவும், விவசாயிகள் டிராக்டர்களால் மோதித் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. 

வன்முறை சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறு விவசாய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சதி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

பிப்ரவரி 1-ம் தேதி விவசாயிகள் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். 

டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட டெல்லியின் சில பகுதிகளில் இண்டர்நேட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த வன்முறைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை அமைக்கக் கோரி ஒரு வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும், அதற்கு காரணமானவர்களை கைது செய்யவும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து