முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள் மாலத்தீவுக்கு பயணம்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாத சூழலில் ஆஸி. வீரர்கள் அனைவரும் மாலத்தீவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா சூழல் காரணமாக,கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் அணிகளின் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பி.சி.சி.ஐ செய்து தரும். ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடர், சில நாள்களுக்கு முன்பு கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார். ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஸி. பிரதமரைக் கண்டித்து பேட்டியளித்தார். 

இந்நிலையில் ஸ்லேடர் வழியைப் பின்பற்றி ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 40 பேரும் மாலத்தீவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து நேராக மாலத்தீவுக்குச் சென்று பிறகு மே 15-க்குப் பிறகு மாலத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து