முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் காயம் : பக்தர்கள் கலக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      ஆன்மிகம்
Pudukottai 2022 07-31

Source: provided

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

புதுக்கோட்டை நகர் பகுதியான திருக்கோகர்ணத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட புதுக்கோட்டை தேவஸ்தானஸ்துக்கு சொந்தமான பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. 

இதையடுத்து தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் இந்த ஆண்டு ஆடிப்பெருந்திருவிழவை சிறப்பாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த 23-ம் தேதி ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 

விழாவின் 9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினர். சரியாக காலை 8.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெறுவதால் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தயாராக இருந்தனர். எப்போதும் கோவில் நிர்வாகம் சார்பில் கொடியசைத்த பின்னரே பக்தர்கள் தேரை இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். 

ஆனால் நேற்று கொடி அசைக்கும் முன்பாகவே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். இதையடுத்து நிலையத்தில் இருந்து இரண்டு அடி நகர்ந்திருந்த நிலையில் தேர் ஒருபக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. இதில் தேரின் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த 5 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டனர். பின்னர் காயம் அடைந்த அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் தேர் கவிழ்ந்ததை பார்த்த அதிர்ச்சியில் 5 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை சிலர் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் நவீன பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்த தேரை நிலை நிறுத்தும் பணியினையும் மேற்கொண்டனர். தேர் புறப்பட்ட இடத்திலேயே கவிழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 2 ஆண்டுகள் தேரோட்டமே நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் தேர் கவிழ்ந்தது பக்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து