முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் -பிரதமர்

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 23 - பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார். அதேநேரத்தில் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தமது அரசு தயாராக உள்ளதாகவும் அவர் சவால் விடுத்தார். பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முன்னதாக பாராளுமன்றத்திற்கு வெளியே மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புறக்கணிக்கப்போவதாக தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. அவரை (சிதம்பரத்தை) புறக்கணிப்பதற்கான காரணம் எதுவும் இல்லை. இது போன்ற புறக்கணிப்புக்களை  அரசியல் கட்சிகள்  தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில்  சிதம்பரத்தை புறக்கணிக்கப்போவதாக  செய்திகள் வந்துள்ளன . அதனால்தான் நான் இதை  சொல்கிறேன் என்று சிங் கூறினார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் பாராளுமன்றத்தில்  அவரை புறக்கணிக்கப்போவதாகவும்  அவர் பேசுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நாம் நமது அரசு விவகாரங்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய நேரிடும் என்றும்  எனவே  நமது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு  செயல்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஒரு மாத காலம் நடக்கும் இந்த குளிர் கால கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்தில்  பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன என்றும்  இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு  ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்கத்தயார் என்றும் பிரதமர் சவால் விடுத்தார்.  நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றம் அடையச்செய்ய  அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு  செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உலக பொருளாதாரமும் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது.  அப்படிப்பட்ட சமயத்தில் நமது பொருளாதாரத்தை  காப்பாற்ற நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. எனவே பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்