சென்னை : ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான நேற்று ஜெயலலிதாவின் மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை கடந்த மாதம் 27-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா ஒரு புறமும், மற்றொரு புறம் டிஜிட்டல் அருங்காட்சியகமும் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான நேற்று திறந்து வைத்தார். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அருங்காட்சியகத்தில் 8 அடி உயர மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.