முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமரணமடைந்த தமிழக இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று போர் வீரர்களின்  வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் குபேர காந்திராஜூக்கு பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு  தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.  

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் மனைவி இ. குமாரி,  தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த  படைவீரர் கே. கருப்பசாமி மனைவி ஆர். தமயந்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் மனைவி  ஜி. பாண்டியம்மாள் ஆகியோருக்கு கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து  தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மேலும்,  லடாக் - காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம்  இந்திய இராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழக இராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ். குபேர காந்திராஜின் சாதனையை  கௌரவித்து  முதல்வர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வி. கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து