முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்துக்கட்சி கூட்டம் 18-ம் தேதி நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை.  இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரு பிரிவுகளாக நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 8-ம் தேதியோடு கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது, 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.  இதுவரை மக்களவை எம்.பி.க்கள் 444 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 218 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் செலுத்தப்பட வில்லை.  இந்த முறை மழைக்கால கூட்டத் தொடரிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் எனத் தெரிகிறது.

பாராளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடரானது வரும் 19-ம் தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது அன்றாடம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள்,

5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 18-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.  கூட்டத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். இதில் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து