முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியேற்றுகிறார் : முப்படை தளபதிகள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022-08-14

Source: provided

புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள இவ்விழாவையொட்டி, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டது.  கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைவரும் சமூக ஊடக முகப்பு படங்களில் தேசியக் கொடியைப் பதிவேற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, பல்வேறு தரப்பினரும் சமூக ஊடக முகப்பில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளனர். 

மேலும்  கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, தேசியக் கொடியை பறக்க விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது.  குறிப்பாக, பகலில் மட்டுமே தேசியக் கொடி பறக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு, இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டது. 

மத்திய அமைச்சர்கள்; நடிகர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார். இதே போல, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஜெய்சங்கர் உட்பட அனைத்து அமைச்சர்களும், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், வீடுகளில் தேசியக் கொடி ஏற்றினர்.

இதேபோல, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, அக்சய் குமார், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், கோவிந்தா, அனில் கபூர், சன்னி தியோல், மாதவன், ரன்பிர் கபூர், நடிகைகள் ஷில்பா ஷெட்டி, கங்கனா ரணாவத், சுஷ்மிதா சென் உள்ளிட்டோர், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டனர்.  மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி மற்றும் தெலுங்கு, கன்னடம், ஒடியா, பெங்காலி, போஜ்புரி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றினர். அதுமட்டுமின்றி, சாதாரண மக்களும் தங்களது வீடுகள், அலுவலகங்களில் தேசியக் கொடியைப் பறக்க விட்டனர்.

செங்கோட்டையில் 7,000 பேர்

இந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் இன்று  நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார் 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  செங்கோட்டை முழுவதும் டெல்லி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், டிரோன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.டி.ஓ. மற்றும் இதர பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும் போது, 

செங்கோட்டையின் சுற்றுப்புறப் பகுதிக்குள் வருவோரைக் கண்காணிக்க நவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் பாட்டில், ரிமோட் கன்ட்ரோல் கார் சாவிகள், சிகரெட் லைட்டர்கள், சிறிய பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலர்கள், குடைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து