முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு வழக்கு விசாரணை பிப். 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
Kodanadu 2022-12-29

Source: provided

ஊட்டி : கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா உட்பட 44 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொடநாடு கொலை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர். 

மேலும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி. முருகவேல், டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். 

வழக்கு விசாரணை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கோரப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் வழக்கை பிப்ரவரி மாதம் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு தொடர்பாக இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது எனக் கூறினார்.

மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் கொடநாடு சம்பவம் நடந்த சமயத்தில் பொறுப்பில் இருந்த அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரான முரளி ரம்பாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் எலக்ட்ரானிக் எவிடன்ஸ் மற்றும் செல்போன் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டதால் வழக்கின் விசாரணை எதிர்வரும் பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து