முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது : மாமல்லபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      தமிழகம்
CM-1 2025-10-28

Source: provided

சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், “2026-ல் நடக்க இருக்கும் தேர்தல் தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் தி.மு.க. ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் தேர்தல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகளுக்கான ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:- உங்களுடைய உழைப்பால், 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்குத் தான் இந்தப் பயிற்சிக் கூட்டம். அதிலும், 2019-ம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம். நம்முடைய வெற்றிகள், நம்முடைய எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம். அன்றைக்கு தலைப்புச் செய்தி என்ன என்றால், “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது.”. தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும் தொழில் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும். இந்தியாவில் எந்த மாநில அரசும் நம்முடைய அளவிற்கு சாதனைகள் செய்திருக்க மாட்டார்கள். மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம். நம்முடைய அரசு செய்த சாதனைகளால் தான் நம்மால் தைரியமாக அனைவர் வீட்டுற்கும் சென்று, ஆதரவு கேட்க முடிகிறது.

மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை, நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லி, ‘தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்’ என்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, இந்த மாபெரும் முன்னெடுப்பை வெற்றியடைய வைத்த, தி.மு.க. தொண்டர்களுக்கு, இந்த மேடையில் இருந்து, என்னுடைய பாராட்டுகளை, சல்யூட் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்.

பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல் முதுகெலும்போடு எதிர்த்து நிற்கிறோம். எதிர்த்து நிற்பது மட்டுமல்ல; விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது மாதிரியான பல போராட்டங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். இப்போது கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, பல்வேறு மாநில முதல்வர்களை ஒன்றிணைத்தோம். அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றி பெற்றோம். இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம் மீது கோபம் வருகிறது. அதனால்தான், பல்வேறு சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலைமையில்தான், அடுத்த கட்டமாக, நமக்கு காத்திருக்கும் பணிகள் என்ன? அதை எப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தலைமை முதல் தொண்டர்கள் வரை எப்படி ஒருங்கிணைந்து ஒரே இலக்குடன் செயல்பட வேண்டும்? என்று விவாதித்து, அதை களத்தில் செயல்படுத்துவதற்காகத் தான், இந்தப் பயிற்சிக் கூட்டம். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் என்று அனைவரும் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கும்போது, உதயசூரியனைப் பார்க்கிறேன். அதனைத் தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது.

இந்தப் பயிற்சி கூட்டத்துக்குப் பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் முகவர்கள், உறுப்பினர்கள் குழு, டிஜிட்டல் ஏஜென்ட், இளைஞர் அணி, மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2026ல் நடக்க இருக்கும் ஜனநாயகத் தேர்தல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் நம்முடைய ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா? என்று தீர்மானிக்கும் தேர்தல். தமிழ்நாட்டின் சுய மரியாதையையும் தனித்தன்மையையும் காப்பாற்றப் போகும் தேர்தல்.

தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும் தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி, நம்முடைய மண், மொழி, மானத்தை காக்க வேண்டும். அதற்காகத்தான் தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

பா.ஜ.க.வின் பகல் கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனாலும், புதிது புதிதாக குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள். எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப் படுத்த இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதைக் காண்பித்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பணிய மாட்டோம். இங்கு அவர்களின் ஆர்.எஸ்.எஸ். பாச்சா எதுவும் பலிக்காது.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தில் 65 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்கு உரிமையை, இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருக்கிறது. இதை தொடக்கத்திலேயே நாம் கண்டித்தோம். தமிழ்நாட்டிலும் அதே குறுக்கு வழியைப் பயன்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சி செய்கிறது என்று அப்போதே சொன்னேன்.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை எஸ்.ஐ.ஆர். மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் தெம்போ திராணியோ இல்லாதவர்கள், மக்களின் வாக்கு உரிமையை பறித்துட்டு வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள்.

எஸ்.ஐ.ஆர். முறையை கைவிட வேண்டும் என்பதையும் வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவே தி.மு.க. வலியுறுத்தி இருக்கிறது. அதையும் மீறி முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்ட ரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனால், நமக்கு மட்டும்தான் உண்டு. மக்களின் வாக்கு உரிமையையே பறிக்கத் துணியும் எஸ்.ஐ.ஆர். செயல்பாட்டை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

எதிர்க்கட்சியான அதி.மு.க., தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும் தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்று நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் தி.மு.க. தொண்டகள் என்று அதன் தலைவர் என்ற முறையில் உறுதி ஏற்கிறேன்.

2021 தேர்தல், தமிழ்நாட்டை கொத்தடிமை அதி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது, தமிழ்நாட்டை பா.ஜ.க.- அதி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப் பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை, வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார். அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை. அவர்களது கட்சிக்காரர்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு செல்லவில்லை. வி.சி.க. வருகிறார்கள், கம்யூனிஸ்ட்டுகள் வருகிறார்கள், காங்கிரஸ் வருகிறார்கள் என்று அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார். ஆனால், யாரும் அங்கு செல்லவில்லை. மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை.

தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதை நம்முடைய கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும். அந்தக் கடமையும் பொறுப்பும் உங்களுக்குத் தான் இருக்கிறது. தி.மு.க. ஏழாவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி, தி.மு.க.வுக்குத் தான் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். கருணாநிதியின் தொண்டர்கள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து