முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2026      இந்தியா
Nirmala-2026-02-01

புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

9வது முறையாக.... 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். 2026 - 27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் மத்திய பட்ஜெட்டை(2026-27) 9வது முறையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் பாராளுமன்றம் செயல்பட்டது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டுக்கு ஒப்புதல்... 

இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருவதாக கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.  முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்து தெரிவித்ததாவது., வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும். வெளிநாட்டு சுற்றுலாவுக்கன வரி பிடித்தம் 2 சதவீதமாகக் குறைக்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். வருமான வரிக் கணக்கு தாக்கல் எளிமையாகிறது.

தரவு மையங்களை... 

வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை அறிவிக்கப்படும். வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அறிவிக்கப்படும். மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும். இந்தியாவில் தரவு மையங்களுக்கு வரும் 2047ஆம் ஆண்டு வரை முழு வரி விலக்கு அளிக்கப்படும். வரிச் சார்ந்த குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாகக் குறைப்பு.

வரி தாக்கல் எளிய முறையில் ...

வருமான வரித் தாக்கல் தொடர்பான சிறு குற்றங்களுக்கு குற்றவியல் நடவடிக்கை இல்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக் கணக்கை காட்ட வாயப்பு அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.6 மாதங்களுக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய திட்டம் அறிமுகம். சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும் வகையில் எளிய முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் முறை அமையும். தனிநபர்கள் வழக்கம் போல ஜூலை 31ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படும். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை.

மருத்துவ செலவுகளுக்காக.. 

திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஆர்.-1 மற்றும் ஐ.டி.ஆர்.-2 வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31-ம் தேதியும், தணிக்கை தேவைப்படாத வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான (TCS), 5% லிருந்து 2%ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களின் வரி குறைப்பு...

வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர டேடா சென்டர் டெவலப்பர் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விடுமுறை அளிக்கப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. 

7 அரிய நோய்களுக்கான... 

புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம், 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி நீக்கம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் மூலம் ஒரு நபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. மேலும், இதற்காக டி.டி.எஸ். பிடிக்கப்படாது. வெளிநாட்டு இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு இனி முதலீடு செய்யவும் அனுமதி. 

ஆதிச்சநல்லூர் தொல்லியல்...

”தமிழ்நாட்டின் பொதிகை மலை, ஹிமாசல், உத்தரகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். கலாசார செழுமையை விளக்கும் வகையில் கலாசார மையம் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநிலங்களுக்கான வரி பகிர்வு...

"2027 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, காலவரையறை நிர்ணயிக்கப்பட்ட பத்திரங்கள் மூலம் ரூ. 11.7 லட்சம் கோடி அரசு கடன் வாங்க உள்ளது. 16 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும். 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான ரூ.1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும். முன்னதாக, நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவம் சார்ந்த படிப்புகள்...

 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு மற்றும் சித்திரக்கலை (காமிக்ஸ்) படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும். மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைப்பு. கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆயுர்வேதத்திற்காக புதிதாக 3 அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உயர் தரங்களுக்கு மேம்படுத்தப்படும்.

5 பல்கலைக்கழக நகரங்கள்...

ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும். தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு ஆதரவு. சுயசார்பு இந்தியாவின் முக்கிய உந்துசக்தியாக சேவைத் துறையை மையமாகக் கொண்ட 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு' நிலைக்குழு அமைக்கப்படும். இந்தக் குழு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.

செமிகண்டக்டர் 2.0 திட்டம்.... 

கருவிகள் மற்றும் கச்சா பொருள்கள் மற்றும் இந்திய அறிவுசார் சொத்துகளை உற்பத்தி செய்வதற்காக ஐஎஸ்எம் 1.0, ஐஎஸ்எம் 2.0 அடிப்படையிலான கட்டமைப்புகள் தொடங்கப்படும். செமிகண்டக்டர் 2.0 திட்ட வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகள் புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம் உருவாக்கப்படும். 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும்.பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

அதிவேக ரயில் வழித்தடங்கள்...

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான கப்பல் பழுதுநீக்கும் கட்டமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும். கடலோர சரக்குப் போக்குவரத்து ஊக்குவிப்புத்திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்துக்கான் பங்களிப்பு அதிகரிக்கும். மத்திய பட்ஜெட் 2026-27 இல், தென்னிந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு இரண்டு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை - பெங்களுரு, சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும். மும்பை - புணே, புணே- ஹைதராபாத், ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரூ, பெங்களூரு - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

புதிய வருமான வரி விதிப்பு முறை:

1) குறைந்தது ரூ. 4 லட்சம் வரை - வரி இல்லை.

2) ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை - 5 சதவிகிதம் வரி.

3) ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை - 10 சதவிகிதம் வரி.

4) ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி.

5) ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை - 25 சதவிகிதம் வரி

6) ரூ.24 லட்சத்துக்கு மேல் -  30 சதவிகிதம் வருமான வரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து