முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மண்ணில் பாகிஸ்தான் கண்ணிவெடிகள் புதைப்பு?

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜன. 17 - ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணி வெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.  

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6 ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8 ம் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வீரரின் தலையை துண்டித்தும் எடுத்துச் சென்றனர். இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவு விரிசலைடைந்து எல்லையில் மிகவும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானுடனான சுமூக உறவு இல்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்திருந்தார். 

பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி நேற்று முன்தினம் இரவு 8. 15 மணியளவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் புதிய தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே எல்லைக் கட்ட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் வேலிகளை ஊடறுத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது வாடிக்கையான ஒன்று. இதற்காகவே பல முறை இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இந்திய ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்புவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அண்மையில் கூட வேலிகளைத் தகர்க்க கண்ணிவெடிகளை தீவிரவாதிகள் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் புதைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இப்பொழுது இந்தியப் பகுதியிலேயே கண்ணி வெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருப்பதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஆசியக் கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி பேசுகையில், 

இந்திய பிரதமரின் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நாங்கள் எந்தப் போர் பதட்டத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 60 ஆண்டு காலமாக எங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து போர் பதட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேர் பலியானால் இந்தியப் பகுதியிலும் இருவர் பலியாகின்றனர். ஆனால் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி போர் பதட்டத்தை உருவாக்குகின்றனர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்