முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேசம்-பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 25 - உத்திரப்பிரதேசம்,பஞ்சாப்,உத்தரகாண்டம், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்துள்ளார். நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர்,கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் முடியும் தருவாயில் உள்ளது. அந்த மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் புதிய சட்டசபை தொடங்க வேண்டும். அதனையொட்டி அந்த 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து நேற்றுமுன்தினம் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்குடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பாதுகாப்புக்காக 80 ஆயிரம் மத்திய போலீஸ் படையை அனுப்ப தயார் என்று உள்துறை செயலாளர் சிங் தெரிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலம் பெரிய மாநிலமாக இருப்பதால் கடந்தாண்டு மாதிரி 7 கட்டமாக தேர்தல் நடத்துவதா அல்லது 8 கட்டமாக தேர்தல் நடத்துவதா என்பது குறித்தும் பிப்ரவரியில் தேர்தல் நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்குமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மணிப்பூர் மாநிலம் சிறிய மாநிலமாக இருந்தாலும் அங்கு நக்சலைட்கள், தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதேசமயத்தில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தல்களின்போது வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடக்கவில்லை.இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை அறிவித்தார். இந்த 5 மாநிலங்களிலும் வருகின்ற ஜனவரி 28-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தேர்தல் நடக்கும் என்றும் குரேஷி அறிவித்தார். உத்திரப்பிரதேச மாநிலம் நாட்டிலேயே பெரிய மாநிலமாகும். அங்கு சட்டசபையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் கடந்த தேர்தலின்போது தேர்தல் நடத்தியது போல் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 7-வது கட்ட தேர்தல் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேசமயத்தில் உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தல் நடக்கும் என்றும் குரேஷி அறிவித்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4,8,11,15,19,23,28 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும். அதன் அண்டை மாநிலமான உத்தரகாண்ட சட்டசபைக்கு ஜனவரி 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். உத்தரகாண்ட் சட்டசபை 70 தொகுதிகளை உள்ளடக்கியதாகும். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும் ஜனவரி 30-ம் தேதியே ஒரு கட்ட தேர்தல் நடக்கும். 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு ஜனவரி 28-ம் தேதியும் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3-ம் தேதியும் நடக்கும் என்று குரேஷி மேலும் கூறினார். இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நேற்று முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும். அதனால் தேர்தலை மார்ச் 3-வது வாரத்தில் நடத்தலாம் என்று முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இதை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்