முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட் : தலைவர்கள் வரவேற்பு - தாயார் அற்புதம்மாள், குடும்பத்தினர் மகிழ்ச்சி

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Arputam 2022 05 18

Source: provided

புதுடெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பேரறிவாளன்  தாயார் அற்புதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

7 பேருக்கு ஆயுள் தண்டனை...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சியில்... 

இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது.

நீதிபதிகள் அதிருப்தி... 

வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக கவர்னர் நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். இது வருத்தம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வாதங்கள் முடிந்து...

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டப்பூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

ஜனாதிபதி மட்டுமே... 

அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. கவர்னர் இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது ஜனாதிபதி மட்டுமே முடிவு எடுக்க முடியும் என கோரப்பட்டிருந்தது.

பேரறிவாளன் தரப்பில்... 

பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

சிறப்பு அதிகாரத்தை... 

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று காலை தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது., பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் கவர்னர் தாமதம் செய்தது தவறாகும். எனவே 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார். 161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே எங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம். இவ்வாறு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர்.

31 ஆண்டுகளுக்கு பிறகு... 

ராஜீவ் கொலை கைதிகள் வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கி உள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டையோ, தமிழக கவர்னரின் அதிகார வரம்பையோ கருத்தில் கொள்ளாமல் தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்து இருக்கிறார்கள். இது மத்திய அரசுக்கு மிகுந்த பின்னடைவாகும்.

சீராய்வு மனு தாக்கல் ?

ராஜீவ் கொலை கைதிகளை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அந்த அதிரடியை நிகழ்த்தி உள்ளது. எனவே சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் குழு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆகையால் பேரறிவாளனை தொடர்ந்து தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரும் பேரறிவாளன் வழியில் சுப்ரீம்கோர்ட்டை அணுக வழிவகை ஏற்பட்டு உள்ளது.

தலைவர்கள் வரவேற்பு...

ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பேரறிவாளன்  தாயார் அற்புதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீர்ப்பின் 8 முக்கிய அம்சங்கள்

1) கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

2) அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.

3) 161-வது சட்டப் பிரிவின் கீழ் கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.

4) முடிவெடுக்க கவர்னர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.

5) உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.

6) இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

7) பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.

8) பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து