முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      இந்தியா

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  சச்சின் பைலட்டுக்கும், கெலாட்டுக்கும் ஏற்பட்ட அதிகார மோதல் விளைவாக பைலட்டின் துணை முதல்வர்  பதவி கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி பறிக்கப்பட்டது.  அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். 

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் யூகங்கள் கிளம்பின.  ஆனால் இதற்கு பைலட் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டது.  இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நேற்று முன்தினம் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதனையேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர்.  சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார். 

இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.  இதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.  இதையடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அவர் கூறினார். 

இதன்படி, ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவை சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சாந்தி குமார் தாரிவால்  தாக்கல் செய்தார்.  சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன் உறுப்பினர்கள் முன்னிலையில் கெலாட் பேசும் பொழுது, நாட்டில் அமலாக்க துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரி துறை போன்றவை தவறாக பயன்படுத்தப்படவில்லையா? தொலைபேசியில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, மற்றொரு நபரையும் வாட்ஸ்அப்பில் இணைந்து கொள்ளும்படி கூறவில்லையா? ஜனநாயக நாட்டில் இது ஒரு நல்ல விசயமா? என அவர் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.  இதனால் ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்வதில் இருந்து காங்கிரஸ் அரசு தப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து