முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் கமலின் வேலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2020      அரசியல்
Image Unavailable

பிக்-பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு விடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டு விடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடிகர் கமலை தாக்கி பேசினார். 

அரியலூர் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- சென்னை ஐ.ஐ.டி.. அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதே?

பதில்:- அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா தொற்று ஏற்படாது. அந்தக் கல்லூரிகளில் அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அங்கிருக்கின்ற மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கேள்வி:- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே? 

பதில்:- அதில் சில வகைமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. விரைந்து செயல்பட்டு அதை கொடுத்து விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நிலம் கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நிலத்தில் எந்தவித இடர்பாடும் இல்லை. அரசு உடனடியாக கொடுப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதில் சில பிரச்சனைகள் இருக்கின்றது. அதையும் சரி செய்து உரிய நேரத்தில் வழங்கப்படும். 

கேள்வி:- மினி கிளினிக் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது, கிராமப்புற மக்களுக்கும் பயனாக இருக்கிறது. இதற்கு தமிழில் பெயர் வைக்காததன் காரணம் என்ன? 

பதில்:- மினி என்றால் மக்களுக்கு உடனடியாகத் தெரியும். எளிதாக இருக்கும், மக்களுக்குப் புரியும். அதற்காகத் தான் வைத்தோமே தவிர, தமிழ்ச் சொல்லை மறைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தமிழ்ச் சொல்லில் ‘சிறு’ என்று வரும், ‘சிறு’ என்று வந்தால் அது மருத்துவமனைக்கு பொருத்தமாக இருக்காது. அதனால்தான் நம்முடைய அதிகாரிகள், மினி கிளினிக் என்றால் மக்களிடத்தில் ஒரு நல்ல இடத்தை பெறும், அதை வைத்து பெயர் வைத்தோம். 

கேள்வி:- அரசு கலைக் கல்லூரிகளில் 3,544 நபர்கள் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றுகிறார்கள். அவர்களை பணி நியமனம் செய்யப்படுவார்களா? 

பதில்:- சட்ட விதிகளுக்குட்பட்டு தான் நியமிக்க முடியும். நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், நீதிமன்றம் சில அறிவிப்புகளை கொடுக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசாங்கத்தின் வழிமுறைகள் இருக்கின்றன. சட்டத்திற்குட்பட்டு இருந்தால் நியமனம் செய்யப்படுவார்கள். 

கேள்வி:- ராஜேந்திர சோழனுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கப்படுமா?

பதில்:-  அது அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கின்றது.  

கேள்வி:- கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக...

பதில்:- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தான் ஆதனூர்-குமாரமங்கலத்தில் ஏறத்தாழ ரூபாய் 365 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும்,  அண்மையில் கரூர், நஞ்சைபுகளூரில் கதவணை கட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார், அந்தப் பணியும் துவங்கியுள்ளது. இப்படி ஒவ்வொரு பணியாக துவக்கிக் கொண்டிருக்கிறோம். எல்லா பணிகளையும் செயல்படுத்த வேண்டுமென்று தான் எண்ணம். எனவே, நிதி ஆதாரத்தைப் பெருக்கி, நீரை தேக்கி வைக்க முடிகின்ற இடங்களிலெல்லாம் நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர் மேலாண்மைத் திட்டத்தில் இந்த வருடம் தேசிய அளவில் விருதைப் பெற்றிருக்கிறோம். பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் அரசு செய்த சாதனைகளைச் சொல்லுங்கள். நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு எங்கள் அரசு எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறது, அவ்வாறு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை நிறைவேற்றியதன் காரணத்தால்தான் தேசிய அளவில் 2019-2020-ல் விருதுகளை பெற்றுள்ளோம்.  

கேள்வி:- எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுவது எப்போது? 

பதில்:- ஏற்கனவே இருக்கும் சாலைகளில் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றது. சேலத்திலிருந்து சென்னை வரை பிரம்மாண்டமான சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். சுமார் 92 சதவீதம் பேர் சென்னை முதல் சேலம் வரையுள்ள 8 வழிச்சாலைக்கு  இசைவு கொடுத்திருக்கின்றார்கள்.  8 சதவீதம் பேர் வேண்டுமென்றே திட்டமிட்டு  தடை செய்து கொண்டிருந்தார்கள். அதை பத்திரிகை நண்பர்களும், தொலைக்காட்சிகளும் பூதாகரமாக்கி விட்டீர்கள். அந்தத் திட்டம் நீதிமன்றம் வரை சென்று இப்போது தான் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அது மத்திய அரசின் திட்டம். நமக்கு 50 கி.மீ. தூரம்  மீதமாகிறது, எரிபொருள் மீதமாகிறது, விபத்து குறைகிறது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் நிலம் மட்டும்தான் எடுத்துக் கொடுக்கிறோம். நிலம் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. விவசாயிகள் நிலங்களை கொடுக்கலாம் என்று எண்ணினால்தான் எடுக்க முடியும். நாங்கள் நிறைய புறவழிச்சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக அரியலூரில்கூட புறவழிச்சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். அதுதான் பிரச்சனையே. நிலம் கொடுக்க முன்வந்தால், அரசு, சாலை அமைக்கத் தயாராக இருக்கிறது. 

கேள்வி:- லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் சிக்குவது குறித்து கமல் கருத்து  தெரிவிக்கும் போது, அரசு எப்படியோ அந்த வழியாக தான் அதிகாரிகளும் என்று கூறியிருக்கிறாரே?

பதில்:-  இது தவறான கருத்து. அரசாங்கம்தானே சோதனை நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை யாருக்குக் கீழ் வருகிறது? தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமென்றுதானே நினைக்கிறது. எங்கும் தவறு நடக்கக்கூடாது, தவறு நடந்தால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். ரிடையர்டு-ஆகி வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும்? 

70 வயதாகிறது. 70 வயதில் பிக்-பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்-பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட தலைவர்கள் சொல்லும் கருத்தை நீங்கள் சொல்வீர்களா? அவர் ஒரு கட்சித் தலைவர், அவர் கேட்கிறார் என்று நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே? நல்ல கேள்வி கேளுங்கள். அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு விடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டு விடும்.  ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எத்தனையோ உள்ளன. நதிகள் இணைப்பைக் காட்டலாம். விவசாயிகள் மேற்கொள்ளும் பண்ணைத் திட்டம், புதிதாக என்னென்ன நடவு செய்கிறார்கள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை எவை என மாணவச் செல்வங்களுக்கு நல்ல அறிவுரையை கொடுங்கள். எம்.ஜி.ஆர் சினிமா மூலம் நல்ல செய்திகளை சொல்லி, நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா? அந்தப் படத்தைப் பார்த்தால் அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகிவிடும், அதுபோன்ற படங்களில்தான் நடிக்கின்றனர். எனவே, அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவோ சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆர், அம்மா  நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் போடுகின்ற திட்டங்கள்தான் இப்போதும் உயிரோட்டமுள்ள திட்டங்களாக இருந்து கொண்டிருக்கிறது. 

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின், மருத்துவராக வேண்டுமென்ற கனவை நனவாக்குவதற்கு அம்மாவின் அரசு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை அளித்து இந்த ஆண்டு 313 மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது, இது ஒரு வரலாற்றுச் சாதனை. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அரசு பள்ளிகளில் பயின்றவன். அரசுப் பள்ளிகளில் 41 விழுக்காடு படிக்கும் மாணவச் செல்வங்களில், கடந்த ஆண்டு 6 மாணவர்களுக்குத் தான் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்தது. அரியலூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளியில் படித்த மூன்று மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதில், இருவருக்கு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கும் ஒருவருக்கு பி.டி.எஸ் படிப்பிற்கும் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்விற்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழக அரசில், நுழைவுத் தேர்வு மூலமும் 40 மாணவ, மாணவியர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அம்மா,  நுழைவுத் தேர்வை நீக்கினார். அம்மா  இருந்த காலத்திலும், அம்மாவின் மறைவிற்குப் பிறகும், கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகளும் மருத்துவர்களாக வேண்டும். எனவே, கிராமம் முன்னேற வேண்டுமானால், கிராமத்தில் வாழ்கின்ற குழந்தைகள் உயர்கல்வி கற்க வேண்டும். அதற்காகத்தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், மருத்துவக் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும், பாலிடெக்னிக் கல்லூரிகளையும், ஐ.டி.ஐ-களையும் கொடுத்துள்ளோம். 3 கால்நடை மருத்துவக் கல்லூரிகளை கொடுத்துள்ளோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் சட்டம் பயில, நான் ஆட்சிக்கு வந்த பிறகு, 6 அரசு சட்டக் கல்லூரிகளைக் கொடுத்துள்ளோம். தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களும் உயர்கல்வி கற்று அவர்களும் மற்றவர்களைப் போல வாழ வேண்டுமென்பதுதான் எங்கள் அரசின் எண்ணம், அதற்காக எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து