திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.
ஆனால் ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டை யொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் கடந்த ஆண்டு முதல் ஆங்கிலப் புத்தாண்டிற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
பக்தர்கள் வழக்கம்போல் சாமியை தரிசனம் செய்து சென்றனர். ஆனாலும் இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஸ்ரீவாணி டிரஸ்ட் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் தரிசனம் செய்வதற்காக கூடுதலாக பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்தற்கு தயாராகி உள்ளனர்.
புத்தாண்டிற்காக தரிசனம் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வழக்கம்போல் தரிசனமே தொடரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.