முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதைக்கட்டுக்குள் கொண்டுவர கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமுலுக்கு வந்தது. மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.

மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு, திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு, திருவிழா நடத்த அனுமதி இல்லை.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.

கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

புதுச்சேரி தவிர்த்து, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து