முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் நானே கண்காணிக்க போகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே கண்காணிக்க போகிறேன் என்றும், அமைச்சர் சேகர் பாபுவை இனி செயல்பாபு என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, 

நம்முடைய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய அருமை சகோதரர் சேகர்பாபு இந்த அறநிலையத்துறையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் எப்படி எல்லாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உள்ளபடியே அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றுதான் அழைக்க வேண்டும் என்று நான் கருதிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் பெயருக்கு முழுத் தகுதி படைத்தவராக அவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்து இருக்கிறது. 

சட்டமன்றத்தில் திட்டத்தை அறிவித்து ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் சட்டமன்றமே முடியவில்லை, 13-ம் தேதிதான் முடிவடைகிறது. சட்டமன்றத்தில் அறிவித்து ஒரு வாரம் ஆவதற்கு முன்னாலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியவர் சேகர்பாபுதான். நாம் அடிக்கடிச் சொல்வோம், எள் என்றால், எண்ணெய் ஆக நிற்பார் என்று. சேகர்பாபுவை பொறுத்தவரையில் எள் என்று சொல்வதற்கு முன்னாலேயே எண்ணெய் ஆக நிற்கக் கூடியவர் நமது அருமை நண்பர் சேகர்பாபு. 

உண்மையில் சொல்ல வேண்டுமானால்,  இந்து சமய அறநிலையத் துறை கொடுத்து வைத்தத் துறையாக சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அமைச்சராக நம்முடைய சேகர்பாபு விளங்கிக் கொண்டு இருக்கிறார்.  கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன. கோவில் சொத்துக்களும் மீட்கப்படுகின்றன.  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்தத் துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இறைவனைப் போற்றும் போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியாகி உள்ளது. அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி தரப்பட்டுள்ளது.  பதினைந்து வகையான பொருட்கள் தரப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஒவ்வொரு துறையினுடைய மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடந்து, அவை எல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது, தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையின் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும், அவரவர்களுடைய துறையின் சார்பில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவிப்புகளாக வெளியிடுவது வழக்கம்.  

அந்த வகையில் அறநிலையத் துறையின் சார்பில் நம்முடைய சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசி அதற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டார். எவ்வளவு அறிவிப்புகள் என்று கேட்டீர்களானால், இதுவரை யாரும் செய்யாத, சட்டமன்றத்திலே இதுவரை இல்லாத வகையில், 120 அறிவிப்புகளை நம்முடைய சேகர்பாபு  சட்டமன்றத்தில் அறிவித்தார். இது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடக்க இருக்கிறது. புதிய தேர்கள் வலம் வரப் போகின்றன. அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இல்லாத வகையிலே, திருக்கோயில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.  அதுதான் மிகமிக முக்கியமான ஒன்று. 

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்குக் குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் அறநிலையத் துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகிறது, அந்தக் காட்சியை நாம் எல்லாம் பார்க்கப் போகிறோம். 

 

சட்டமன்றக் கூட்டத் தொடர் வருகிற 13-ம் தேதி முடிய இருக்கிறது. அதன்பிறகு சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிப்புகளை செய்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கிறோம். வெறும் அறிவிப்போடு எந்தத் திட்டமும் நின்று விடாது, அதனை மாதந்தோறும் நானே கண்காணிக்கப் போகிறேன். மேலும், அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே கண்காணிக்க போகிறேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் நான் முன்னுரிமை கொடுத்து, அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியிலே நிச்சயம் நான் ஈடுபடப் போகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து