முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது : 14-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. வரும் 14-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் (3-ம்தேதி) தொடங்கியது. 

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் நேற்று தொடங்கியது. இதையொட்டி நம் பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.

இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ம் தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். வரும் 14-ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ம் தேதி தீர்த்தவாரியும், 24-ம்  தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து