முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

105-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மலர்தூவி மரியாதை

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளும் திரளாக இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இனிப்புகளை வழங்கினர்.  இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சின்னையா, மாதவரம் மூர்த்தி, இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன், துணைச் செயலாளர் இ.சி.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருந்த நிலையில் ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கொட்டும் மழையிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. கட்சி தொண்டர்களும், தலைவர்களும் மழையில் நனைந்தபடியே எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சா. கலைப்புனிதன் எழுதிய புரட்சித் தலைவரின் அறமும், அரசியலும் என்ற நூலினை வெளியிட்டனர்.   

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி கட்சியினர் தங்களது வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் எம்.ஜி.ஆர். படத்தை அலங்கரித்து வைத்து மாலை அணிவித்து இருந்தனர்.  புகைப்படம் முன்பு ஊதுபத்தி, பழங்களை வைத்தும் வழிபட்டனர். பிறந்தநாளை கொண்டாடும் வகையில் எம்.ஜி.ஆர். பாடல்களையும் ஒலிபரப்பப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து