முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபந்தனைகளை நீக்கினால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தகவல்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்      அரசியல்
OPS 2023 01 28

நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இ.பி.எஸ். பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், இ.பி.எஸ். தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. எனவே, பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்குப்பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான, வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள், நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நேற்று (மார்ச் 22) விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களின் விவரம் வருமாறு., ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், விளக்கம் கேட்காமல், காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது நியாமற்றது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதற்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்ஜிஆர். விதிகளை வகுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் நான் போட்டியிடத் தயார்; வழக்கையும் வாபஸ் பெறத் தயார்.. இவ்வாறு ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்கள் அனைத்தும் நிறைவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது முதலில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தனர். 

அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும், வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து