முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34 பேர் பலிக்கு வெடிமருந்து கடத்தலே காரணம்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 34 பேர் பலியான சம்பவத்துக்கு வெடிமருந்து கடத்தப்பட்டதுதான் காரணம் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 28-ம் தேதி புறப்பட்டது. 30-ம்தேதி அதிகாலை 4.45 மணியளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது எஸ்11 பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 34 பேர் உடல் கருகி பலியானார்கள். 24 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி டி.கே.சிங் தலைமையிலான குழுவினர் 2 நாள் நெல்லூரில் விசாரணை நடத்தினர். ரயில்வே மின்வாரிய துறையினர், தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தனர். எனவே, தீ விபத்துக்கு ரசாயனம், வெடிருந்து, கேஸ் போன்ற பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட எஸ்.11 பெட்டியில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடயவியல் அறிஞர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரணை குழுவினர், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர்கள், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.  டிக்கெட் பரிசோதகர் கமல்காந்த் என்பவர் எஸ் 11 பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு பயணம் செய்ய அனுமதித்ததாகவும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அலட்சியமாக பணியில் இருந்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது ரயில்வே துறை சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த ரயிலில் சென்னைக்கு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து பொருட்களை கடத்தி சென்றதால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தடயவியல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிலிண்டர் வெடித்தால் ஒரு முறைதான் சத்தம் கேட்கும். ஆனால் ரயிலில் 3 முறை சத்தம் கேட்டதாக சக பயணிகள் கூறியதால், இந்த தீ விபத்துக்கு கடத்தப்பட்ட வெடிபொருள்தான் காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.11 பெட்டியில் சீட்டுக்கு அடியில் இருந்த வெடிமருந்துகளை யாராவது காலில் தள்ளியிருந்தாலோ அல்லது வேறு பொருட்களுடன் வெடிமருந்து உரசியிருந்தாலோ வெடி விபத்து ஏற்பட்டிருக்கும். தீபாவளி நெருங்குவதால் பட்டாசுகளை தயாரிக்க வெடிமருந்து பொருட்களை டெல்லியிலிருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை கொண்டு சென்றிருக்கலாம் என விசாரணை குழுவினர் கருதுகின்றனர். மேலும் இதுவரை நெல்லூர் அரசு மருத்துவமனையில் 28 சடலங்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 2 சடலங்களை மட்டும் வாங்க இதுவரை யாரும் வரவில்லை. எனவே, வெடிமருந்து கடத்தலில் ஈடுபட்டதால் இந்த 2 சடலங்களை யாரும் வாங்க வரவில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்