முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாசாலை ரசாயன நிறுவனத்தில் தீ விபத்து

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 15 - சென்னை அண்ணா சாலை ஆனந்த் தியேட்டர் அருகே உள்ள ரசாயன பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. இதனால் அண்ணா சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை அண்ணாசாலை ஆனந்த் தியேட்டர் சிக்னல் அருகே 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ஓட்டல், முதல் தளத்தில் வங்கி, 2​ம் தளத்தில் ரசாயன பொருட்கள் நிறுவனம், 3​வது தளத்தில் சிமெண்ட் நிறுவன அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 9 மணியளவில் ரசாயன பொருள் நிறுவன உரிமையாளர் ஜிக்னேஷ் அலுவலகத்துக்கு வந்தார். இந்த நிறுவனத்தில் அச்சு எந்திரங்களுக்கு தேவையான பிளேட் தயாரிக்கப்படும். இதற்கு பயன்படுத்துவதற்காக ரசாயன பொருட்கள் நிறைய இருந்தது. ஜிக்னேஷ் அலுவலக கதவை திறந்து ஏ.சி.யை ஆன் பண்ணினார். அப்போது திடீரென்று தீ பிடித்து கரும்புகை சூழ்ந்தது. இதனால் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்த ஜிக்னேஷ் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். 2​ம் தளம் முழுவதும் கரும்புகை மூட்டத்துடன் ஜன்னல்கள் வழியாக குபு குபு என்று புகை வந்தது. இதனால் பீதியடைந்து மற்ற தளங்களில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். தேனாம்பேட்டை, எழும்nullர், அடையாறு பகுதிகளில் இருந்து 10​க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. ஜன்னல்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ரசாயன பொருட்களில் தீ பிடித்ததால் தண்ணீரை அடித்ததும் மேலும் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசாயன தீயை அணைக்கும் நுரை, மற்றும் வாயுக்களை செலுத்தி தீயை அணைத்தனர். தீ பிடித்ததை வேடிக்கை பார்க்க பெருங்கூட்டம் கூடியது. தீயணைப்பு வண்டிகளும் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுதூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

தீப்பிடித்த இடம் 2ம் தளம்  என்பதாலும், குறுகிய இடம் என்பதாலும் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதற்கிடையே கட்டிடத்திற்குள் யாராவது ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகித்த தீயணைப்பு வீரர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொறுத்தப்பட்ட உடை அணிந்து உள்ளே சென்று தேடினர். ஆனால், யாரும் உள்ளே இல்லாததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து பற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேதத்தின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நேற்று அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்