முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு: தமிழக பள்ளிகளில் பிளஸ் - 1 மாணவர் சேர்க்கை துவங்கியது: இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 15 சதவீத இடங்களுக்கு சிறப்பு அனுமதி

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நேற்று தொடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறையாததால் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித்தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டன. தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது.

உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால் அந்த தேர்வை ரத்து செய்வது மட்டும் தாமதமானது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. 

அதே போல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு செல்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடாக 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை நடத்தலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மாணவ-மாணவிகளை அழைத்து மாணவர் சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. 

முதலில் அந்தந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பின்னரே மற்ற பள்ளிகளில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால் கூடுதலாக 15 சதவீதம் வரை இடங்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை முழுவதுமாக முடிவடைந்த பிறகு மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து