முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி:இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்டப்படி நடக்குமா ?

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசு முடிவு...

மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்புதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ஏ அணியினர் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்து விளையாடி வருகிறார்கள். வரும் நாட்களில் புதிய கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தால், இந்திய அணி வீரர்கள் அங்கு செல்வார்களா என்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்தே அமையும்.

புதிய கொரோனா...

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன்முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

அதிக வீரியம்...

இந்தப் புதிய வைரஸ் ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட இந்தப் புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

எதிர்க்கும் தன்மை...

இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், அறிவியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கொரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

டிசம்பர் 8-ம் தேதி...

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் முடிந்தபின், டிசம்பர் 8-ம் தேதியே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி முதல் தொடர் தொடங்குவதால் 10 நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால், முன்கூட்டியே செல்கிறார்கள். ஆனால், தற்போது இந்திய ஏ அணியில் விளையாடிவரும் சில வீரர்களை அங்கேயே தங்கவைத்து, இந்திய அணியில் முக்கியமான வீரர்களை மட்டும் அனுப்பவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

3 டெஸ்ட் போட்டி...

தென் ஆப்பிரிக்கப் பயணத்தில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17-ம் தேதியும், அதன்பின் டிசம்பர் 26-ம் தேதி பாக்ஸிங்டே டெஸ்ட்டாக சென்சூரியனிலும், 2022, ஜனவரி 3-ம் தேதி கேப்டவுனில் 3-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

கேள்விக்குறி...

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயணம் திட்டமிட்டப்படி நடக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து