முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 8,286 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது : பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல்

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8286 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு  பருவ மழை நிலவரம் குறித்து வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 7.75 மி.மீ. ஆகும்.  வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 30.11.2021 வரை 651.1 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 356.0 மி.மீட்டரை விட 83 சதவீதம் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8286 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2788 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. 

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து, நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்துக்கொண்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்து விடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.  தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களில்  சென்னையில்  2 குழுக்கள், திருவள்ளுர், காஞ்சிபுரத்தில் தலா ஒரு குழு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சியில்  மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 363 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 198 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழையினால் இராமநாதபுரத்தில் ஒரு நபர் சுவர் இடிந்து விழுந்ததால் இறந்துள்ளார்.  கடந்த 24 மணி நேரத்தில், 436 கால்நடைகளும், 6817 கோழிகளும் இறந்துள்ளன.  2571 குடிசைகள் பகுதியாகவும், 189 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2760 குடிசைகளும், 431 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 436 வீடுகள் சேதமடைந்துள்ளன.  பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 8571 புகார்கள் வரப்பெற்று, 2681 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து