முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்: பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி பதில்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. வருகிற 7-ம் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிகிறது. பின்னர் இந்திய அணி தென் ஆப்பிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது என்றார்.

___________

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 

ஆஸி. அணிக்கு புதிய கீப்பர் 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் ஆஷஸ் தொடரில் முதல் இரு டெஸ்டுகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். 30 வயது அலெக்ஸ் கேரி, ஆஸ்திரேலிய அணிக்காக 45 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸி. ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டபோது ஆஸி. அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். 

_____________

சீனாவில் அனைத்து டென்னிஸ் 

போட்டிகளும் ரத்து - டபிள்யூடிஏ 

சீன ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகா் ஜாங் காவ்லி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் கடந்த மாத தொடக்கத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பதிவு நீக்கப்பட்டது. அதன் பிறகு பெங் ஷுவாய் வெளியுலகத் தொடா்பில் இல்லாத நிலையில் இருந்தார். அவரைத் தொடா்பு கொள்ள முடியாத நிலையும் இருந்தது. வெளியுலகம் கேள்வி எழுப்பியதை அடுத்து பெங் ஷுவாய் பாதுகாப்பாக இருப்பதாக சீன அரசு ஊடகம் பதில் தெரிவித்தாலும், அதைப் பல்வேறு தரப்பினரும் ஏற்கவில்லை.

35 வயது  பெங் ஷுவாய், 2014-ல் இரட்டையர் தரவரிசையில் நெ.1 வீராங்கனையாகத் திகழ்ந்தவர். இந்த உயரத்தை அடைந்த முதல் சீன வீராங்கனை. இரட்டையர் பிரிவில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் ஹாங்காங் உள்பட சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து டபிள்யூடிஏ போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. டபிள்யூடிஏ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் சைமன், இந்த நடவடிக்கை குறித்து அளித்த விளக்கத்தில்., பெங் ஷுவாயால் சுதந்திரமாகப் பேச முடியாமல், பாலியல் குற்றச்சாட்டை மறுத்துக் கூறும்படியான அழுத்தம் உள்ள நிலையில் இதர வீராங்கனைகளை எப்படி சீனாவுக்கு அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

____________

ஐ.பி.எல்.லில் சம்பள உயர்வு 

பெற்ற வெங்கடேஷ் ஐயர் !

ஐ.பி.எல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டிருப்பதால் தற்போது தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அதிக மடங்கு  சம்பள உயர்வு பெற்ற வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2021 ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. இப்போது 40 மடங்கு சம்பள உயர்வு. இதற்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கேவின் ருதுராஜ். 30 மடங்கு சம்பள உயர்வுடன் ரூ. 6 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். 

____________

ஐ.பி.எல்.லில் ஒரே அணிக்காக

9 முறை தக்கவைக்கப்பட்ட வீரர்

ஐ.பி.எல் போட்டியில் பங்குபெறும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பளம் முதல்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்கு ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் தேர்வானார். இம்முறை குறைந்த சம்பளத்துடன் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.  2012-ல் ஐ.பி.எல் போட்டியில் அறிமுகம் ஆனார் மேக்ஸ்வெல். டிராவிஸ் பர்ட்-டுக்குப் பதிலாக தில்லி அணியில் 20,000 அமெரிக்க டாலருக்குத் தேர்வானார். இந்த வருட ஏலத்தில் பெரிய தொகைக்கு ஆர்சிபி அணியில் தேர்வானார் மேக்ஸ்வெல். தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கும் விதமாகச் சிறப்பாக விளையாடினார். 15 ஆட்டங்களில் 6 அரை சதங்களுடன் 513 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். எகானமி - ரூ. 144. 

இதனால் இந்த வருடம் மேக்ஸ்வெல்லைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆர்சிபி அணி. ஆனால் இதன் காரணமாக மேக்ஸ்வெல்லின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ரூ. 15 கோடி தரவேண்டியிருப்பதால் மேக்ஸ்வெல்லுக்கு ரூ. 11 கோடியும் சிராஜுக்கு ரூ. 7 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு முறையும் அதிகச் சம்பளம் பெற்று வந்தார் மேக்ஸ்வெல். அதிலும் கடந்த ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்குத் தேர்வாகி ஆச்சர்யப்படுத்தினார். இம்முறை ஆர்சிபி அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ. 11 கோடி என குறைந்த சம்பளத்தில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார். 

___________

தென் ஆப்பிர்கா சுற்றுப்பயணம்: 

இந்திய 'ஏ' அணி அபார ஆட்டம்

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது.  இந்நிலையில் 2-வது நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணியை 297 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது இந்திய ஏ அணி. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 59 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. 

 

______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து