முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது: மேல் முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
GST-2022-05-19

`ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது’ என்றும் `ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மாநில சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு சம உரிமை உள்ளது’ என சுப்ரீம் கோர்ட் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரே வரி நிர்ணயம்...

இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி ஜி.எஸ்.டி வரி தற்போது அமலில் உள்ளது. ஜி.எஸ்.டி என அழைக்கப்படும் இந்த வரி வருவாயை மாநில அரசுகளும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன.

ஜி.எஸ்.டி கவுன்சில்... 

ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவை தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலே பொருட்களுக்கான வரியை கூட்டுவது, குறைப்பது, நீக்குவது உள்ளிட்ட முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த கவுன்சிலில் மத்திய நிதியயைமைச்சர். பல மாநிலங்களில் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

மேல்முறையீடு...

கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரச்சூடு தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சம அளவு அதிகாரம்...

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் படி `வரிவிதிப்பில் மாநில மற்றும் மத்திய அரசிற்கு பிரத்தியேக அதிகாரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டவை ஆகும். அரசியல் சாசன பிரிவு 246A படி வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களில் சம அளவு அதிகாரம் உள்ளது.

கூட்டாட்சி தத்துவம்...

அதே போல 279 வது பிரிவு மத்திய மாநில அரசுகளுக்கு கான ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. ஜி.எஸ்.டி கவுன்சிலில் வாக்களிக்கும் கட்டமைப்பு என்பது 1/3 என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசுக்கும் 2/3 விகிதாச்சாரம் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாகவும் மாறி உள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கிறது.

கட்டுப்படுத்தாது...

ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் குழப்பத்தை தவிர்ப்பதற்காகத்தான் கூட்டாட்சித் தத்துவத்தில் மத்திய அரசுக்கு சற்று அதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்தியக் கூட்டாட்சி என்பது மாநிலமும், மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கடிய இடமாகும். எனவே இதனடிப்படையில் பார்த்தால் ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜி.எஸ்.டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து