முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

திங்கட்கிழமை, 23 மே 2022      தமிழகம்
ks alagiri-2022-05-12

Source: provided

சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்கும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் சட்டம் அவரை தூக்கில் போட்டது.

அதுபோன்றுதான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கொலை செய்த ஒருவரை நாம் விடுவிக்கலாமா ? தமிழ்நாட்டில் கொலை-கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சுமார் 500 முதல் 600 பேர் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில்களில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்களும் தமிழர்கள்தான்.

ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை ஏன் விடுவிக்கக் கூடாது? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

இதையெல்லாம் உணர்ந்துதான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உருவானது. இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் தி.மு.க. தரப்பிலும் எங்களுடன் கூட்டணியை தொடர்ந்தனர். இந்த கொள்கை முரண்பாடுகள் கூட்டணியை ஒருபோதும் சிதைத்தது இல்லை.

பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானதுதான். அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது.

தமிழக காங்கிரசுக்கு நான் தலைவரான பிறகு பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தது உண்டு. ஆனால் அதை நான் ஊக்கப்படுத்தியது இல்லை. அதனால்தான் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 72 சதவீத வெற்றி கிடைத்தது.

எனது அனுபவத்தை பொறுத்தவரை ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும் என்பது இல்லை. அந்த செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் திறன் இருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 1991-ம் ஆண்டு எங்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்தது. ஆனால் அதை அ.தி.மு.க. அறுவடை செய்தது.

கூட்டணி என்பது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன. தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்தி விட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை குறைத்து பாதித்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை. ஒரு கூட்டணி வலுவாக இருந்தால் கட்சியையும் அது வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இது சொல்வதற்கு எளிது. செயல்படுத்துவதற்கு கடினமாகும்.

தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டும். சில தேர்தல்களில் நாம் தோற்க நேரிடலாம். மக்கள் உடனடியாக நமக்கு ஓட்டு போட்டு விட மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனித் தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். தனி நபர்கள் தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் அது அவர்களுக்கு தோல்வியைத்தான் தரும்.

தமிழகத்தில் பல கட்சிகள் தோன்றி உள்ளன. சிறந்த பேச்சாளர்கள் அவற்றில் இருந்தனர். மணிக்கணக்கில் பேசுபவர்கள் கூட இருந்தார்கள். ஆனால் எல்லோராலும் வெற்றி பெற இயலவில்லை. காங்கிரசின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான விஷயங்களுக்கு திட்டமிட வேண்டும். இலக்கு நிர்ணயிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகுதான் காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ச்சிப் பெற மக்கள் உதவி செய்வார்கள். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து