முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது : சட்டமன்ற அனைத்துக்கட்சி குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி

புதன்கிழமை, 22 ஜூன் 2022      தமிழகம்
Duraimurugan 2022-06-22

Source: provided

சென்னை : தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்றுள்ள தமிழக சட்டமன்ற அனைத்துக்கட்சி குழுவிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சருடன்...

தமிழக மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, புதுடெல்லியில் நேற்று (22.06.2022) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர். பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் 

கட்சி தலைவர்கள்...

இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வைகோ, முனைவர் மு. தம்பித்துரை, ஏ.கே.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.க. மணி, கு.செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ். பாலாஜி, நயினார்  நாகேந்திரன்,  தி.இராமசந்திரன், பி. சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், திரு.எம். ஜெகன்மூர்த்தி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைமை உள்ளுறை ஆணையர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா, உள்துறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவிரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய கோரிக்கை...

மத்திய அமைச்சருடனான கூட்டத்திற்கு பிறகு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது., மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம். 

தீர்ப்புக்கு முரண்... 

ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வழக்கறிஞரிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

மத்திய அமைச்சர்...

மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில், கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை அவர் உறுதி செய்துள்ளார் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து