முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
Weather-Center 2021 12-05

Source: provided

சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நீடிப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

28-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (30-ம் தேதி) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து வரும் 01.02.2023 அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக் கூடும்.

இதன் காரணமாக, இன்று 30-ம் தேதி,  தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 31-ம் தேதி  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 01-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 02-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானக்ம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில்ல் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து