முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
Erode East 2023 01 24

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். மேலும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதி என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா வெற்றி பெற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா.  அண்மையில் திடீர் உடல்நலக் குறைவால் திருமகன் ஈ.வெ.ரா. காலமானார். 

அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தல்களுடன் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27-ம் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அ.தி.மு.க. இதுவரை  வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை 31-ம் தேதி தொடங்க உள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7. இதனையடுத்து மறுநாள் பிப்ரவரி 8-ல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். அனைத்து வேட்புமனுக்களையும் திரும்பப் பெற பிப்ரவரி 10-ம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்டுப்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து