முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர்வாழ் தமிழ் பேராசிரியர் திண்ணப்பனுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்      உலகம்
CM-1 2023-05-25

சென்னை, சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப. திண்ணப்பனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுடன் தமிழகத்திற்கு  உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழகத்தில்  முதலீடுகள் மேற்கொள்ளும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூர் வாழ் தமிழர், தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.  

தமிழ் பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், அதிராம்பட்டினம் கல்லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன்,  கடந்த பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கு தமிழ்மொழிப் பாடத்திட்டக்குழு, பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றிலும், கல்வி அமைச்சகத்தின் குழுக்களிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். 

இவர் ஆற்றிய தமிழ்ச்சேவைக்கு  பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் காலஞ்சென்ற எஸ்.ஆர்.நாதனுக்கு தமிழ் பயிற்றுவித்துள்ளார்.

 88 வயதான முனைவர் சுப. திண்ணப்பனுக்கு, அவர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு முதல்வர் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார். 

முதல்வரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் சுப.திண்ணப்பன்,  

நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரால் தான் வந்தது. திருவாரூரில் நான் படித்துக் கொண்டு இருந்த போது தான் முதன்முதலில் கலைஞரின்  பேச்சைக் கேட்டேன். அப்போது தான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது, தமிழ் ஆசிரியராக வேண்டும். தமிழ் பேராசிரியராக வேண்டும் என்ற வேட்கை வந்தது. 

முதல்வர் ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இப்போது தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிங்கப்பூர் வந்துள்ளார். 

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை பாராட்டியதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.  

இச்சந்திப்பின் போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 

தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பனை  சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான உங்களில் ஒருவன் - முதல் பாகம் நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றினேன்.

தமிழும் தமிழர் நலமும் காக்கும் நமது அரசின் பணிகளைப் பாராட்டினார். தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார். 

சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் சிலவற்றை நமது அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதைத் தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என உறுதியளித்தேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து