முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் செயலி மூலம் ரூ.46 லட்சம் நூதன மோசடி இளைஞர் கைது - லேப்டாப், செல்போன் பறிமுதல்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
theft

Source: provided

தூத்துக்குடி: செல்போன் செயலி மூலம் ரூ.46 லட்சம் நூதன மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது52). சேலத்தை சேர்ந்த இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது செல்போன் செயலியில் பகுதி நேர வேலை தேவையா என்ற விளம்பரம் வந்துள்ளது.

இதைப்பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசினார். அப்போது அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அது உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு செய்தால் கமிஷன் தருவதாகவும் தங்க துரையிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து முதலில் ரூ.1,100, ரூ.1,500 லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்துள்ளனர். பின்னர் அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை செய்யும்படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தங்கதுரை அவர்கள் கூறிய வலைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 91 ஆயிரத் 54-ஐ தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து தேசிய சைபர் கிரைம் பிரிவு தளத்தில் புகார் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்கதுரையிடம் பணம் மோசடி செய்தது நெல்லை மாவட்டம் மானூர் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த எலியாஸ் பிரேம் குமார் (வயது31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

விசாரணையில் எலியாஸ் பிரேம்குமார் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தி உள்ளதும், அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூ.25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் எலியாஸ் மேலும் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்து லேப்டாப், செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்பு களையும் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து