முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே.வை வீழ்த்தியது லக்னோ

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      விளையாட்டு
Lucknow-Super-Giants 2024-0

Source: provided

லக்னோ : குயின்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ரச்சின் ரவீந்திரா...

34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினர். ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கெய்க்வாட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரகானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஜடேஜா அரைசதம்...

ரகானே 36 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே (3), இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி (1) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து ஜடேஜாவுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 20 பந்தில் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

டி காக் - ராகுல்...

அடுத்து வந்த டோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 57 ஓட்டங்களுடனும் டோனி 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் அணித்தலைவர் கே.எல். ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.

இருவரும் அரைசதம்...

இருவரும் அரைசதம் கடந்த நிலையில், குயின்டன் டி காக் 54 ஓட்டங்களிலும், கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 180 ஓட்டங்கள் எடுத்து இலக்கை கடந்தது. நிக்கோலஸ் பூரான் 23 ஓட்டங்களுடனும் மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மகிழ்ச்சியாக... 

இந்நிலையில் இந்த போட்டியின்போது அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறுகையில்., "உண்மையிலேயே இந்த போட்டி முடிந்த விதம் குறித்து மகிழ்ச்சியாக நினைக்கிறேன். எப்போதுமே ஒரு வெற்றி நல்ல உணர்வை தரும். அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக வைத்து வெற்றி பெற்றுள்ளோம். இந்த மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்குள் அவர்களை சுருட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதிக ரன் குவிக்க...

ஆனால் மகேந்திர சிங் டோனி பின் வரிசையில் களமிறங்கி எங்களது பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்து கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை சி.எஸ்.கே. அணி குவிக்க காரணமாக அமைந்தார். பின்னர் மைதானத்தின் தன்மையை உணர்ந்து நாங்கள் சிறப்பான துவக்கத்தை அளித்தோம். சி.எஸ்.கே அணியின் ஸ்பின்னர்களும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருந்தாலும் எங்களுடைய பேட்டிங்கில் நல்ல ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது. அடுத்ததாக சென்னை மைதானத்தில் அவர்களுடன் விளையாடப் போகும் போட்டி வித்தியாசமாக அமையும். அங்கேயும் எங்களது வெற்றியை தொடர விரும்புகிறோம்" என்று கூறினார்.

2 பேருக்கும் அபராதம்

இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து ரூ. 12 லட்சம் அபராதமாக அறிவிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல லக்னோவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் சி.எஸ்.கே. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து ரூ. 12 லட்சம் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து