முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ளது.  

கேரள மாநிலம்,  ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,  அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.  கடந்த சில நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கேரளத்தை ஒட்டியுள்ள கோவை,  கன்னியாகுமரி,  தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பும்,  சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,  தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும்,  வழிகாட்டுதல்களும் விடுக்கப்பட்டுள்ளன.   

இது தொடர்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது: “பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள்,  பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது.  குறிப்பாக,  அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும்.  காய்ச்சல்,  தலைவலி,  தசைப் பிடிப்பு,  இருமல்,  மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது.

அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களும்,  சுகாதாரப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.  கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து விரைவு மருத்துவக் குழுக்களுக்கான பயிற்சிகளை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல்,  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  குறிப்பாக,  பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து வருவோருக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம்.  பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை மருத்துவமனைகள் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும்,  பாதிப்பு விவரங்களை சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு கவசங்கள், ஓசல்டாமிவிர் மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து