முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி : 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

சென்னை : கவர்னர்கள், ஜனாதிபதி மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரெளவுபதி முர்மு கேள்விகள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை சீர்குலைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பை பாதுகாக்க முன் வாருங்கள் என 8 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், “சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்விகள் கேட்டு ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குகிறேன். என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியக் ஜனாதிபதி, மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், கடந்த 13-5-2025 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்று. இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம்.

தனது அரசாங்கத்தால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதைக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இது மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படுபவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான கவர்னரால் தடைபடுவதைத் திறம்படத் தடுக்கும் வகையில் உள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுத்திட கவர்னர்களைப் பயன்படுத்திய விதத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். குறிப்பாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை கவர்னர்கள் ஏற்படுத்துகிறார்கள் உரிய அரசியலமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்தி வைக்கிறார்கள்.

கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் வழக்கமான கோப்புகள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறார்கள். கல்வி நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கவர்னர்களால் இதைச் செய்ய முடிந்தது. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய பெருமக்கள், உயர் அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் அரசியலமைப்பு ஒழுக்கத்தின்படி செயல்படுவார்கள் என்று நம்பினர்.

இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு அரசு கவர்னருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி 

(i) மசோதாக்களைக் கையாளும் போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்படுகிறார்.

(ii) மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த கவர்னர் "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.

(iii) ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலமும், மசோதாக்களை அவைக்குத் திருப்பி அனுப்பாமல் இருப்பதன் மூலமும் கவர்னர் மசோதாக்களை செயலிழக்கச் செய்ய முடியாது.

(iv) ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, இரண்டாவது முறையாக ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது கவர்னர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது.

(v) பிரிவுகள் 200 மற்றும் 201-ன்கீழ் ஜனாதிபதி மற்றும் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு உறுதி செய்யும். நமது அரசியலமைப்பின் பாதுகாவலராக, கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஜனநாயகக் குடியரசை அடிப்படையாக கொண்ட நமது சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கில் அரசியலமைப்பை சரியாக விளக்கியுள்ளது. ஆனால், வெளிப்படையாக பா.ஜ.க. இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது.

மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கினைக் கடைபிடிக்கும் கவர்னரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்தத் தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம். பா.ஜ.க. அரசாங்கம் தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக ஜனாதிபதியை சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது. கவர்னர்களின் விவகாரத்தில் கேள்விக்குரிய பிரச்சினை ஏற்கனவே நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பால் முடிவு செய்யப்பட்டிருக்கும் போது, சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது அனைவரும் அறிந்தது.

ஆனாலும், பா.ஜ.க. அரசு ஒரு பரிந்துரையைப் பெறுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது அவர்களின் தீய நோக்கத்தைக் குறிக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட, பா.ஜ.க.-வை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநிலக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணையுமாறு நான் ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளேன்.

சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்விகள் கேட்டு ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, நமது சுப்ரீம் கோர்ட் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குகிறேன். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து