முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்கமளித்தார் சுந்தர்: சுதர்சன்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      விளையாட்டு
Sai-Sutharson 11-04-2025

Source: provided

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்  தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனும் இடம்பெற்றுள்ளார்.  இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட தனக்கு வாஷிங்டன் சுந்தர் ஊக்கமளித்தாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சாய் சுதர்சன் பேசியதாவது: வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக சில போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும்.  வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாடினார். அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடினார். சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்பது மிகவும் ஊக்கமளித்தது. வாஷிங்டன் சுந்தரை எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும். அதுவே அவரைப் போன்று நானும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அவர் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவராக உள்ளார் என்றார்.

________________________________________________________________________________________________________

திண்டுக்கல் அணி மீது புகார்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.

இதற்கிடையே  டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் எழுதி உள்ள கடிதத்தில்,  எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது. இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

________________________________________________________________________________________________________

அணியுடன் இணைந்த காம்பீர்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இந்நிலையில் மருத்துவ அவசரம் காரணமாக கடந்த வாரம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் அவசரமாக தாயகம் திரும்பினார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காம்பீரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் அணியுடன் இணைவார் என பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இன்று (ஜூன் 17) இணையவுள்ளதாக பி.சி.சி.ஐ. தகவறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீரின் தாயார் நலமாக உள்ளார். மீண்டும் இந்திய அணியுடன் இணைவதற்காக கௌதம் காம்பீர் நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணி தோல்வி

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஹாக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 

இந்திய அணியில் சஞ்சய் மற்றும் தில்பிரீத்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் டிம் பிராண்ட், பிளேக் கவர்ஸ் மற்றும் கூப்பர் பர்ன்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த சுற்றில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். இப்படி தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள இந்திய அணி தனது அடுத்த லீக்கில் இதே இடத்தில் வருகிற 21-ந்தேதி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

________________________________________________________________________________________________________

கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து