முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
EPS 2025-10-22

Source: provided

தஞ்சாவூர் : போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தஞ்சாவூர், திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். அதன்பிறகு, செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் செய்துள்ளனர். தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மதியம் வரை பல இடங்களில் விவசாயிகளை சந்தித்தேன். விவசாயிகள் படும் துன்பங்களை பார்த்தேன். தஞ்சாவூர் காட்டூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல் முளைத்து பாதிப்படைந்துள்ளது. உடனடியாக நெல் கொள்முதல் செய்யாததே இதற்கு காரணம். 5 ஆயிரம் மூட்டைகள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் மூட்டைகள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை.

மற்றொரு கொள்முதல் நிலையத்தில் 6 ஆயிரம் மூட்டைகள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. திருவாரூர் படூர் கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 7,500 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள அந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகப்போய்விட்டது. 

மொத்தம் 5 இடங்களுக்கு சென்று நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டோம். ஒரு நாளைக்கு 900 மூட்டைகளே எடை போட்டு கொள்முதல் செய்யப்படுகின்றன. அதுவும் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்படவே இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால், கொள்முதல் செய்த நெல்லை லாரிகள் மூலம் அனுப்பினால்தான் புதிதாக கொள்முதல் செய்ய முடியும் என்று கூறுகின்றனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் ஆயிரம் மூட்டைகள் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் எடை போட்டோம். இன்று நாள் ஒன்றுக்கு 900 மூட்டைகள்தான். ஆனால், அமைச்சர் சட்டசபையில் 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக கூறினார். எதற்கு இந்த அரசாங்கம் இருக்கிறது. நேரடியாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லைக்கூட கொள்முதல் செய்ய முடியவில்லை. விவசாயிகள் நகையை அடமானம் வைத்து பயிரிட்டு நெல்லை கொண்டு வந்திருக்கிறார்கள். 

ஆனால், திறந்த வெளியில் முளைத்துப் போய் கிடக்கின்றன. விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுகிறார்கள். நாங்கள் உணவு உற்பத்தியை பெருக்க கூறுகிறோம். ஆனால், உற்பத்தி செய்த நெல்லைக்கூட கொள்முதல் செய்ய முடியவில்லை. இது அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. மத்திய அரசு அனுமதி கிடைக்காததால்தான் கொள்முதல் செய்ய முடியவில்லை என்கிறார்கள். ஆனால், மத்திய அரசு ஆகஸ்ட் 18-ந்தேதியே அனுமதி கொடுத்துள்ளது. அதுகூட அமைச்சருக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து