முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் விவகாரம்: பிரதமர் கருத்துக்கு ரஷ்யா ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,பிப். 26 - கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தூண்டி விடுவதாக பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியிருந்ததை ரஷ்யா ஆதரித்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்காவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களே தூண்டி விடுவதாக கூறி பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டை போராட்டக்காரர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். 

ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தூண்டியதாக கருதப்படும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமியும் தெரிவித்துள்ளார். இதனையும் மறுத்துள்ள கூடங்குளம் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றிருப்பதை நிரூபித்தால் தண்டனையை ஏற்க தயார் என்று கூறியிருந்தார். 

இதனிடையே அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதல் குறித்த பிரதமர் மன்மோகன்சிங் கருத்தை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் வரவேற்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் எம் கட்கின், கூடங்குளம் போராட்டம் தொடர்பான ரஷ்யாவின் சந்தேகத்தை பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்து உறுதிப்படுத்தி உள்ளது. இக்குற்றச்சாட்டை நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு 6 மாதங்கள் கழித்து திடீரென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடங்குளத்துக்கு எதிராக குரல் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் நிலையமாக கூடங்குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்