முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ப.சிதம்பரம் பிரச்சாரம் வாசன் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 11 - மதுரையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்த பிரச்சார நிகழ்ச்சியை வாசன் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். மேலும்  தனது ஆதரவு வேட்பாளருக்கு மட்டும் பிரச்சாரம் செய்து விட்டு, மற்ற வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யாததால் காங்கிரசார் கொதிப்படைந்துள்ளனர்.    மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் மற்றும் மதுரை தெற்கு ஆகியவற்றில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜன் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்று கூறிப்படுகிறது. இதனால் இவரது பிரச்சாரத்தில் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஆனால் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாசன் ஆதரவாளர்கள் ராம்பாபு, தெய்வநாயகம் போன்றோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரது ஆதரவு வேட்பாளரான வரதராஜனுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களான ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் வேட்பாளர் சுந்தர்ராஜனுக்கோ பிரச்சாரம் செய்யாமல் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மதுரையில் தெப்பக்குளம், தெற்குவாசல் போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ப.சிதம்பரத்தின் பிரச்சாரத்தில் வாசன், தங்கபாலு, இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. பழைய காங்கிரசார் மட்டும் வந்து நின்றனர். காலை நேரம் என்பதால் பொதுமக்களும் கூடவில்லை. இது ஒரு தனி கட்சி போல அவரது ஆதரவு வேட்பாளரை மட்டும் வேனில் ஏற்றி சிதம்பரம் பிரச்சாரம் செய்ததது காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரச்சாரத்தின் போது மத்திய அரசின் திட்டங்கள் ஒன்றை கூறாமல் திமுக அரசின் தேர்தல் அறிக்கையை அப்படியே வாசித்தது பொதுமக்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் ஒரு வரியை கூட கூறாதது காங்கிரசாரிடையே வேதனையைதான் ஏற்படுத்தியது.

   இது குறித்துகாங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறும் போது, காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு ஆதரவான வேட்பாளருக்கு மட்டும் ஓட்டு கேட்டு விட்டு மற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யாமல் போனால் எப்படி ஜெயிக்க முடியும். அனைவரையும் காங்கிரஸ் வேட்பாளர் என்று நினைக்க வேண்டுமே தவிர இது அவரது ஆள், என்று பிரச்சாரம் செய்யாமல் சென்றால் இவர்களை எப்படி காங்கிரஸ் தலைவர்களாக ஏற்றுக்கொள்வது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்