முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் எதிர்ப்பு அலையில் சிக்கித் தவிக்கும் தி.மு.க கூட்டணி

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.12 - தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால், எதிர்ப்பு அலையில் சிக்கித் தவிக்கின்றனர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் அடைந்த துன்பங்களுக்கு பழி தீர்க்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க ஒட்டுமொத்த தமிழக மக்களும் முடிவெடுத்து விட்டனர். 

மக்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களாட்சி என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை. அவரது கூற்றுப்படி அம்மக்களுக்காக மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரம், கல்வி, சமூக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களையும், நாட்டையும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாடுபட வேண்டும். இதுதான் மக்களாட்சி தத்துவம். 

எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர் கருணாநிதி. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கருணாநிதி இந்த மக்களாட்சி தத்துவத்தை மறந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் மறந்து ஊழல் செய்து தானும், தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ வழிவகையை தேடிக் கொண்டார். தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், தான் சம்பாதித்த பொருள், உழைப்பு ஆகியவற்றை வழங்கிய எம்.ஜி.ஆர். அக்கட்சியின் வளர்ச்சிக்காக தன் உயிரையும் விடத் துணிந்தவர். 

சினிமாத் துறையில் தாங்கள் வளர்ச்சியடைவதற்காக கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வர். ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க.வை வளர்ப்பதற்காக அதில் இணைந்தவர். தி.மு.க.வின் வளர்ச்சிக்காக அவர் செய்த தியாகங்களை கண்டு பொறாமையடைந்த கருணாநிதி, அவரை தி.மு.க.வில் இருந்து 1971 ல் வெளியேற்றினார். அதன் பின் கருணாநிதியின் மக்கள் விரோத செயல்களை முறியடிக்க வேண்டும் என்பதற்காக 1972 ல் அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர், கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து 1977 ல் தமிழக மக்களை மீட்டார். 

அவரது மறைவிற்கு பின் பிளவுபட்ட அ.தி.மு.கவினால் மீண்டும் ஆட்சியை பிடித்தார் கருணாநிதி. அப்போதும் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டாமல் அவரும், அவரது உறவினர்களும், குடும்பத்தினரும், தமிழக மக்களை எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழக மக்களை சுரண்ட முடியுமோ அந்தெந்த வழிகளில் எல்லாம் சுரண்டி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டனர். மக்களுக்கான புரட்சித் திட்டங்களை தீட்டுவதற்கு பதிலாக தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி விட்டனர். 

நெசவு, தொழிற்சாலைகள், சாயக்கழிவு தொழில், சிறு, குறு தொழில்கள், விவசாயம் என அனைத்து தொழில்களும் நசுங்கி விட்டன. கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து நன்றாக உள்ள ரோடுகளையும், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோடுகளையும் தோண்டி மீண்டும் ரோடு போட்டு கொள்ளையடித்தல், மணல், கிரானைட் கொள்ளை என அனைத்து வகையான கொள்ளைகளிலும் பெருமளவு சம்பாதித்து விட்டனர் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியினரும். 

ஏற்கனவே கொள்ளையடித்தது போதாது என்று நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் கொள்ளையிட கருணாநிதி திட்டமிட்டுள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர். இதையறிந்த கருணாநிதி, தேர்தல் பிரச்சாரங்களில் உளறி வருகிறார். அவரது ஆட்சியில் அவரால் ஏற்பட்ட பிரச்சினைகளை அப்போதே தீர்க்காமல் வெற்றி பெற்றால் தீர்த்து வைக்கப் போவதாக கூறி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்டோர் எரிச்சல் அடைந்துள்ளனர். 

கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள், விலங்குகள், இயங்கை வளங்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டன. 

அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. காவல் துறையினர், வக்கீல்கள், நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை. ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியன சர்வசாதாரணமாக நடக்கிறது. இதனால் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. மக்கள் மரண பீதியில் உள்ளனர். எப்போது எது நடக்கும் என்பதறியாமலும், வீடுகளை பூட்டி சென்றால் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை போகின்றன. நாட்டில் பஞ்சம் அதிகரித்து விட்டதால் வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது. மக்கள் நிம்மதியிழந்து விட்டனர். அராஜகம், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளைகள் என தமிழகத்தில் மலிந்து விட்டன. 

இதனால் ஆட்சிக் கட்டிலில் இருந்து கருணாநிதியை தூக்கியெறிய மக்கள் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13 ல் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தி.முக.வினருக்கும் முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். பல்வேறு தில்லுமுல்லு நாடகங்களை அரங்கேற்றி எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரத் துடிக்கும் கருணாநிதியின் ஆசை கனவுகளை தகர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல அதிரடியான நேர்மையான நடவடிக்கைகளை எடுத்ததால் தி.மு.க.வின் திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன. இதனால் தி.மு.க.வினர் கலக்கமடைந்துள்ள நிலையிலும், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தி.மு.கவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பட்ட இன்னல்களால் தி.முக.வுக்கு எதிராக மக்கள் களமிறங்கி விட்டனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகளால் கொதிப்படைந்த கருணாநிதியும், அவரது மகன்கள், பேரன்கள் அனைவரும் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகின்றனர். கருணாநிதிக்கும், தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக மக்கள் எதிர்ப்பாக கிளம்பி விட்டனர். இந்த நிலையில் கருணாநிதியின் தில்லுமுல்லுகளை முறியடிக்கவும், கருத்துக் கணிப்பை உண்மையாக்கும் வகையிலும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் ஜனநாயகமாக தேர்தல் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன கருணாநிதி, தமிழகத்தில் யார் ஆட்சி நடக்கிறது, நான் முதல்வராக இருக்கிறேனா? அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என மேடைகளில் புலம்பி வருகிறார்.  

 

கருணாநிதிக்கும், தி.மு.க ஆட்சிக்கும் எதிராக ஓட்டுப் போட மக்கள் முடிவெடுத்ததற்கான காரணங்கள்:

 

1. தொடர் மின்வெட்டு

2. அனைத்து பொருட்களின் விலையேற்றம்

3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு

4. பன்னாட்டு நிறுவனங்களில் கணிசமான தொகைகளை பெற்றுக் கொண்டு அவற்றை வாழ வைக்க தமிழக மக்களை மின்வெட்டால் அவதியுறச் செய்தது

5. இந்நிறுவனங்களுக்காக ஏழை, எளிய, நடுத்தர, விவசாயிகளின் நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி பெற்றது. 

6. மக்களாட்சி தத்துவத்தை விட்டு விட்டு மன்னராட்சி கொள்கையை கடைப்பிடித்தது

7. மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி, மருமகன் மற்றொரு மத்திய அமைச்சர், இது தவிர கருணாநிதியின் வாரிசுகள் தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களை தத்தெடுத்துக் கொண்டு அங்கு குறுநில மன்னர்கள் போல் அராஜகம் செய்வது, 

8. கைத்தறி, நெசவு, பின்னலாடை, பீடி, பட்டாசு, தீப்பெட்டி, ஜவுளி உட்பட அனைத்து உள்நாட்டு சிறு மற்றும் குறுந்தொழில்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.

9. பஸ் கட்டண உயர்வு

10. சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதது, 

11. தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை அண்டை மாநிலங்களில் இருந்து பெற்றுத் தர முயற்சி எடுக்காதது.

12. இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காதது.

13. அன்றாட வயிற்றுப் பிழைப்பாக கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை சிங்கள வெறியர்கள் சுட்டுக் கொலை செய்வதை எதிர்த்து குரல் கொடுக்காதது. 

14. தமிழக மீனவர்களுக்கு பேராசை அதிகம். அதனால்தான் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள். ஏன் எல்லை தாண்டி செல்ல வேண்டும் என எகத்தாளமான கருணாநிதியின் பேச்சு. 

15. கருணாநிதியின் குடும்பம், அவரது கட்சியினர் கொள்ளை லாபம் சம்பாதிக்க இயற்கை வளங்களை கொள்ளையடித்தது

16. 2 ஏக்கர் நிலம் தராதது. சட்டம், ஒழுங்கு சீரழிவு 

ஆகியவற்றுக்காக தி.மு.க. அரசையும், கருணாநிதியையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இதற்காக ஏப்ரல் 13 ஐ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அன்றைய தினம் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.விற்கு ஓட்டளிக்க முடிவும் செய்து விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்