முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க வணிக வளாக வழக்கு முடிவுக்கு வந்தது

சனிக்கிழமை, 26 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஜன.27  - நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு தடை கேட்ட வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில் தியாகராயநகர் அபிபுல்லா சாலையை சேர்ந்த அன்னா மதன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம், உள்ள  பகுதியில் உள்ள  பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மாணவமாணவிகள் படிக்கின்றனர். அது குடியிருப்பு பகுதியாகும்.அந்த இடத்தில் 8 சினிமா தியேட்டர், உள்விளையாட்டு அரங்கம், கடைகள் உள்ளடக்கிய வர்த்தக கட்டுமானத்தை அமைக்க சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் நடிகர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.குடியிருப்பு பகுதியில் வணிக வளாகம் அமைத்தால், அங்கிருக்கும் மாணவர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவோம். எனவே அங்கு வர்த்தக கட்டிடத்தை கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.), சென்னை மாநகராட்சிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அங்குள்ள கட்டிடத்தை இடிப்பதற்கு மட்டுமே அனுமதி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.சி.எம்.டி.ஏ. தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அங்கு கட்டிடம் கட்டுவதற்காக முன்மொழிவு எதுவும் பெறப்படவில்லை. அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கு சற்று முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கருதுகிறோம். ஊகத்தின் அடிப்படையில் மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்போது வழக்கு தொடரலாம். எனவே இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்