முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - சென்னை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெம்மேலியில் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் ஆலை ரூ.1000 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். 

சட்டசபையில் நேற்று அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-

தமிழ்நாட்டின் தலைநகராகவும், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் விளங்கி வரும் நவீனமும், பாரம்பரியமும் மிக்க சென்னை மாநகரத்தை எழிலார்ந்த சென்னையாக உருவாக்கும் அதே சமயத்தில், சென்னை மாநகரத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் சென்னை மாநகருக்கு நிகராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது. 

சென்னை மாநகரத்தில் நிலவி வந்த குடிநீர்ப் பற்றாக்குறையை போக்கும் வகையில், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், 2004 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கும் புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீஞ்சூரில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டன. 

அந்த வகையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆலந்தூர், பெருங்குடி, கொட்டிவாக்கம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும்  சுமார் 6.46 லட்சம் மக்கள்  பயனடைவர். 

மேலும், சென்னைக்கு அருகில் உள்ள பட்டிபுலம் பகுதியில் எதிர்காலத்தில்  400 மில்லியன் லிட்டர் வரை விரிவாக்கம் செய்யக் கூடிய வகையில், 200 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் நிலையம்  ஒன்றினை 4 ஆண்டுகளுக்குள் அமைத்திட எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தொடங்கப்பட்ட  சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் மூலம் 192 கோடியே 2 லட்சம் ரூபாய் 

2012- 2013 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு 9 பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 303 கோடியே 

78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இடையான் சாவடி, சடையான் குப்பம்,  கடப்பாக்கம், மணலி, சரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், புழல், பள்ளிக்கரணை, கொட்டிவாக்கம், சின்ன சேக்காடு, முகலிவாக்கம், பெருங்குடி மற்றும் பாலவாக்கம் ஆகிய 14 பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வண்ணம்,  குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3.47 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலேயே குழாய் மூலம் குடிநீர் பெற்று பயனடைவர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்