முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - பேருந்து விபத்தில் பலியான இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி கிராமம்,  அரசு மருத்துவமனை அருகில் 22.1.2012 அன்று திருச்சிராப்பள்ளியிலிருந்து பழனி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணம் செய்த மணப்பாறை வட்டம், புதுமணியாரம்பட்டி, முகவனூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவரின் நான்கு வயது குழந்தை கபிரியேல் மற்றும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த பாலுசென்னையா என்பவரின் இரண்டு வயது குழந்தை ராகவேந்திரா ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்த குழந்தைகள் கபிரியேல் மற்றும் ராகவேந்திரா ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இத்துயரச் சம்பவத்தில் இருபது பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும்,  திருச்சிராப்பள்ளி மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும்,  இவர்கள் விரைவில் ரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.         

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகள் கபிரியேல் மற்றும் ராகவேந்திரா ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு  லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-​ ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/-​ ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்