முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு '2030' செயல் திட்டத்தின் 14 அம்சங்கள் : கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்
CM-1-2026-03-06

சென்னை, வீட்டு வசதி முதல் ஜவுளித் துறை வரை தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான 14 திட்டங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இவற்றையெல்லாம் நனவாக்கி 2030-ம் ஆண்டில் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவோம் என உறுதி அளித்துள்ளார்.

 கனவுகள் மெய்ப்படும்....

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், "உங்கள் கனவ சொல்லுங்க" திட்டத்தின் நிறைவாக "கனவுகள் மெய்ப்படும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது., “தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இன்றைய நிகழ்ச்சி போல என்றைக்கும் நடந்திருக்காது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமல்ல, எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து, இந்த “தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்.

மக்களுக்காக யோசித்து....

கடந்த 5 ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களில் எந்த திட்டம் சிறப்பானது என்று என்னைக் கேட்டால், அனைத்துத் திட்டங்களும் சிறப்பானதுதான் என்று சொல்வேன். ஏனென்றால், ஒவ்வொரு திட்டத்தையும் தேவைக்கேற்ப மக்களுக்காக யோசித்து, திட்டம் தீட்டி, அவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறோம், அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறோம் – அதனால்தான், நான் அடிக்கடி சொல்வேன். நம்முடைய திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறோம்.

ப்ளூ பிரின்ட் தயாரிக்க....

என்னுடைய அரசு செய்திருக்கும் சாதனைகளை நம்பி நான் உறுதியாக சொல்கிறேன். அடுத்து, அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். எங்களுடைய சாதனைகளின் அடுத்தகட்டமாக, திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். அதற்கான ட்ரெய்லர்தான் இந்த நிகழ்ச்சி. அடுத்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்; நாம் எந்த பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு ப்ளூ பிரின்ட் தயாரிக்க திட்டமிட்டோம். அப்போது எனக்கு அண்ணா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடம் இருந்து கற்றுக்கொள்” எனும் அறிவுரையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாக சென்று, அவர்களின் கனவுகளை, அவர்கள் தேவைகளை, அவர்கள் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தோம். இதை எப்படி செய்திருக்கிறோம் என்பது பற்றி அமுதா ஐ.ஏ.எஸ்., சொன்னார்.

மக்கள் சொன்ன கருத்துகளை அடிப்படையாக வைத்து, அதில் முக்கியமானவற்றை எல்லாம் முன்னுரிமைப்படுத்தி, தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான எனது தொலைநோக்குப் பார்வை, அதாவது, “தமிழ்நாடு 2030” - 14 முக்கிய அம்சங்களை என் மக்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். 

முதல் துறை – வீட்டுவசதித்துறை: 

நம் கனவு, நம் வீடு, நம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும்; ஒவ்வொரு முகவரியும் ஒரு இனிய இல்லமாக திகழ வேண்டும். 2030-ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ஐந்து லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் இரண்டு இலட்சம் வீடுகளும் கட்டி, தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம்.

2-வது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: 

“நலமுடன் தமிழ்நாடு 2030” தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மூன்று முக்கிய திட்டங்களும் இருக்கிறது. முதல் திட்டம் - நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையிலேயே சிறப்பு முகாம்கள். இரண்டாவது திட்டம் - தாய் சேய் நலனில் IMR மற்றும் MMR குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம் பெற சிறப்பு நடவடிக்கை. மூன்றாவது திட்டம் - ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

3-வது துறை - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை: 

வேளாண்மை - செழிப்பின், கண்ணியத்தின், வளர்ச்சியின் அடையாளம். நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். மண்வள அட்டைகள் 43 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும்.

4-வது துறை - பள்ளிக் கல்வி துறை: 

ஒவ்வொரு பள்ளியும் அறிவின் ஆலயமாக இருக்கிறது. ‘இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு – 2030’. இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்ந்து, வெற்றியுடன் வெளியேறும் நிலையை உருவாக்குவோம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு ‘ஸ்மார்ட் வகுப்பறைகள்' அமைக்கப்படும். 300-க்கும் மேற்பட்ட நூலகங்கள்  புரட்சிகர நவீன அறிவுக் கோட்டைகளாக மலரும். முக்கியமாக, ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், உடல்நலத்திற்காக விளையாட்டையும் - உளவியல் பாதுகாப்பையும் - வாழ்க்கைத் திறன் கல்வியையும் உறுதிப்படுத்துவோம்.

5-வது - உயர்கல்வித் துறை: 

உயர்கல்வி நிறுவனங்கள் - மாணவர்களின் மொத்த ஆளுமையை வளர்க்கும் மையங்கள். நான் முதல்வன் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உலகளவில் நம் இளைஞர்கள் போட்டி போட வழிவகுக்கப்படும். 2030-ம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 90 விழுக்காட்டை எட்டும் வகையில், நிறுவன கட்டமைப்பு விரிவாக்கப்படும்; ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும், தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கல்வியுடன் இணைக்கப்படும்; ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஏ.ஐ. ஆய்வகம் உருவாகும். பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு, நம் மாணவர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கு வழி வகுக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள், உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், விளையாட்டு திறன்மிகு மாணவர்களுக்கு, ‘Flexible’ பாடத்திட்டம் மூலம் ‘அகாடெமிக் கிரெடிட்ஸ்’ வழங்கப்படும்.

6-வது - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை: 

"நல்லிணக்கத்தின் அடையாளம், வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு" ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி போன்ற துறைகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்.

7-வது - ஆதிதிராவிடர் நலத் துறை: 

அடிப்படை உரிமை, அசைக்கமுடியாத கண்ணியம்" 2030-ம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களிடையே பள்ளி இடைநிறுத்தம் இல்லாத நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உண்டு உறைவிடப் பள்ளிகள் விரிவாக்கப்படும்.

8-வது - ஊரக வளர்ச்சி துறை: 

கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம். ஊராட்சிகளில் வருவாய் ஈட்டும் உற்பத்தித் திறன் கொண்ட நிலையான சொத்துக்களை உருவாக்குவதை முன்னுரிமையாக கொண்டு கிராம சந்தைகள், விளையாட்டு மற்றும் நல்வாழ்வு உட்கட்டமைப்புகள், கிராமப்புற நீர்நிலைகளை செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களை பசுமையாக்குதல், வேளாண் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அரசு செலவில், அதிக பயன் பெறுதல் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கத்தை அடைய, ஒரு உன்னதமான திட்டம் உருவாக்கப்படும். அதற்கு, உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் என பெயரிடப்படும்.

9-வது தொழில்துறை: 

தமிழ்நாடு, இந்தியாவின் பொருளாதார வல்லரசாக இருக்கிறது.” அதற்கு எங்களுடைய இலக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும். “மேக் இன் தமிழ்நாடு ” ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர் பெற, மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா, ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு, பொது வசதி மையம் ஆகியவை அமைக்கப்படும். மின்னணுவியல் துறையில், மதிப்புக் கூட்டல் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படும். ஐ.டி. ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து 6 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும். ஐ.டி. துறையில் மட்டும் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித் தொழிலும், நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர்-கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். 

10-வதுகால்நடை, பால்வளம் -மீன்வளத் துறை: 

நம்முடைய உயிர்வளம் காப்போம். அலைகளோடு போராடி வாழும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து, உற்பத்தியை 200 டன்னிலிருந்து 400 டன்னாக உயர்த்துவோம். மீனவ மகளிருக்காக, கடல்பாசி சாகுபடியை 15 ஆயிரம் டன்னிலிருந்து 30 ஆயிரம் டன்னாக வளர்ப்போம். உள்நாட்டு மீன் உற்பத்தியை 2.67 லட்சம் டன்னிலிருந்து 4.50 லட்சம் டன்னாக உயர்த்துவோம்.

11-வது - நகராட்சி நிருவாகத் துறை: 

பச்சை மரங்கள் என எழிலான சாலைகள் நகரங்களில் உருவாக்கப்படும். 2030-ம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்பகுதியில், 20 விழுக்காடு பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, 30 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். 2030-ஆம் ஆண்டில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நகர்ப்புற நிலங்களில் குறைந்தது 3 விழுக்காடு ஸ்பான்ஜ் சிட்டி உட்கட்டமைப்பாக மாற்றப்படும். சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.

12-வது  எம்.எஸ்.எம்.இ. துறை: 

40 லட்சத்து 56 ஆயிரம் பதிவுபெற்ற எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுடன் நம் நாட்டில் 3-ஆம் இடம் வகிக்கும் தமிழ்நாடு, வரும் 2030-ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2030-ஆம் ஆண்டில், இந்தத் துறை சார்பாக ஐந்து சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, உணவு பதப்படுத்துதல், தேங்காய் நார் உற்பத்திப் பொருட்கள் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நம்முடைய எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பங்கேற்பதற்கு வழிவகைகள் செய்யப்படும். ஆண்டுதோறும் எம்.எஸ்.எம்.இ.  நிறுவனங்களின் ஒரு மாபெரும் பன்னாட்டு தொழில் கண்காட்சி நடத்தப்படும்.

13-வது நெடுஞ்சாலைத் துறை: 

நவீன சாலை தொழில்நுட்பம், ஏ.ஐ. கண்காணிப்பு ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். விபத்துகள் குறைக்கப்படும். கோயில் நகரங்களுக்கும், கடலோர சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு, உலக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் தரத்தில் அமைக்கப்படும்.

14-வது கைத்தறி மற்றும் ஜவுளி துறை: 

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உற்பத்தியை பன்மடங்காக்கி, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும். ஜி.ஐ. பதிவு பெற்ற தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் - தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படும்.

 

இது, உங்கள் கனவு. தமிழ்நாட்டு மக்களின் கனவு. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கண்ட கனவு. இவை அனைத்தும் செயல்வடிவம் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கின்ற உறுதி மொழி. இதையெல்லாம் நனவாக்கி, 2030-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவோம். நாங்கள்தான் மீண்டும் வருவோம் நாங்கள்தான் மீண்டும் வெல்வோம். மீண்டும் மீண்டும் வெல்வோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து