முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வரும் 17-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தொடர் பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதையொட்டி வரும் 17-ம் தேதி சிவகாசியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடக்கவிழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, 17-ம் தேதி அன்று 47-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், 17-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பபட்டுள்ளது. இந்த கூட்டங்களில்  அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்டசெயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17-ம் தேதி ஆங்காங்கே அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து