முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தான் திட்டம் துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை- சிவகங்கை மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி எல்லாத் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்
                    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக குஜராத் மாநிலம் அகமதபாத்திலிருந்து மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் காணொலிக்காட்சியின் மூலமாக துவக்கி வைக்கப்பட்டதையொட்டி அதனை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் ஏராளமான அமைப்பு சாரா தொழிழலாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசுகையில்,
        பாரத பிரதமர் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்றம் பெற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக கடந்த வாரம் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வந்த நிலையில் குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.6,000-  நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் தமிழக முதலமைச்சர் அவர்களும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000-ம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு அதுவும் தற்பொழுது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம்  ரூ.3,000-  வழங்க புதிய திட்டம் இன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
       இத்திட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக 18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள தொழிலாளர்கள் எந்தப் பணிகளை மேற்கொண்டாலும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவார். குறிப்பாக விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்களும் இத்திட்டத்தில் உறுப்பினர் ஆகலாம். 18 வயது துவக்கத்தில் தொழிலாளராக பணிபுரியும் போது மாதம் ரூ.55- கட்டி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு உறுப்பினர் கட்டும் பணத்திற்கு நிகராக மத்திய அரசு அவர் கணக்கில் அதற்குரிய பங்குத் தொகையை
வங்கியில் செலுத்தும். இதில் பதிவு செய்பவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு இருந்தால் போதும். உறுப்பினராகச் சேரலாம். நான்கு ஆண்டிற்கு ஒருமுறை ரூ.10- வீதம் உயர்ந்து 40 வயது உறுப்பினர் மாதா மாதம் சந்தாத் தொகையினை கட்டி வரவேண்டும். 40-வது வயதில் மாதம் ரூ.200- வரை சந்தா கட்ட வேண்டும். அதற்கு நிகராக மத்திய அரசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விடும். 40 வயது முடிவுற்றவுடன் பணம் கட்டத் தேவையில்லை. 60 வயது பூர்த்தியானவுடன் தகுதியுடைய உறுப்பினர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000-  வங்கிக் கணக்கில் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும். அதைப் பெற்று பயன்பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம் வயதான காலத்தில் தனக்கு தேவையான உதவிகளைப் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திட இத்திட்டம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் கட்டாயம் இதில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெற வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.                                                                                                                                                                            
        தொடர்ந்து, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு அடையாள அட்டைகளை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் வழங்கினார்.
        இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி, வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவி ஆணையர் சாஜி, குன்றக்குடி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய முதல்வர் செந்தூர்குமரன், அமலாக்க அலுவலர் சுந்தன், கூட்டுறவு விற்பனை பண்டகச் சாலை சங்கத்தலைவர் ஆனந்தன், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், ராஜா, பலராமன், பாண்டி, ஜெயப்பிரகாஷ், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து