முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக பரிசோதனையால்தான் கொரோனா தொற்று குறைந்துள்ளது: எதிர்க்கட்சிகளுக்கு பாராட்ட மனமில்லை: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா தொற்று விவகாரத்தில் அதிகளவில் பரிசோதனை நடத்தப்பட்டதால்தான் தொற்று குறைந்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அரசை பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை. குற்றம் சுமத்துவதே அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் திண்டுக்கல் வந்தார். அங்கு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை வந்த அவர், வடபழஞ்சியில் அதிநவீன கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். பின்னர் மதுரை கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு அதிக சோதனை செய்த மாநிலம் தமிழகம்தான். என். 95 முக கவசம், ஆக்ஜிசன் கருவிகள் உட்பட சிகிச்சை உபகரணங்கள் இங்கு தேவையான அளவில் இருப்பு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை என்ற கனவு மதுரை மக்களுக்கு நிறைவேறி உள்ளது. பிரதமர் மோடி இங்கு வந்து அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். இதற்கான நிதி கிடைத்தவுடன் பணி தொடங்கும்.

மதுரை மாவட்டத்தில் 1.83 லட்சம் பேருக்கு இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்சுகள் 103 கோடியில் வாங்கப்படும். இவ்வாறு கூறிய முதல்வர், மதுரையில் நடக்கும் பல்வேறு பணிகளை பட்டியலிட்டு காட்டினார். மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, 2-வது முறையாக மக்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்பட்டதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

தனியார் மருத்துவமனைகள் பண வசூல் செய்வது பற்றி கேட்ட போது, மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். உரிய சிகிச்சையை மக்களுக்கு தர வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா இறப்பு விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அதனால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. அதிக பரிசோதனை நடப்பதால் தொற்று பாதிப்பு குறைகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அரசை பாராட்ட மனமில்லை. குற்றம் சுமத்துவதே அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்று முதல்வர் வேதனையோடு கூறினார். தடுப்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததாக கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்ட போது, நோய் பரவலை தடுக்கவே அதிக சோதனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் கூட 3 நாளாகிறது. ஆனால் இங்கு டெஸ்ட் ரிசல்ட் 24 மணி நேரத்தில் வந்து விடுகிறது. இது சாதாரண விஷயமல்ல. உயிர் பிரச்சினை. எனவே அவசரப்படக் கூடாது என்று முதல்வர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து